பார்ல் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பிட்ச்சின் தன்மை காரணமாக இந்திய அணிக்கு பெரிய சிக்கல் உள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வரும் ஒருநாள் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்துள்ளது. அதன் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1 - 1 என்ற சமநிலையில் உள்ளனர்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும். இந்த நிலையில், மூன்றாவது போட்டி நடைபெற உள்ள பார்ல் நகரின் போலான்ட் பார்க் மைதானம் தென்னாப்பிரிக்கா அணிக்கு சாதகமானது என இதற்கு முன் நடந்த போட்டிகள் மூலம் கணிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுடன் மோதியது. அந்த இரண்டு போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணியே வென்றது. அதற்கு காரணம், இந்த மைதானத்தின் பிட்ச்சை தென்னாப்பிரிக்க அணி அதிகம் புரிந்து வைத்திருப்பது தான்.
போலான்ட் பார்க் மைதானத்தின் பிட்ச்சில் பந்து வீசினால் பந்து மெதுவாகவும், உயரம் குறைவாகவும் செல்லும் என கூறப்படுகிறது. அதனால், பவுன்ஸ் இருக்காது. இது போன்ற பிட்ச்களில் 300 ரன்னை தாண்டி ரன் குவிப்பது கடினம். பிட்ச்சை புரிந்து கொண்டால் மட்டுமே பேட்டிங்கில் சமாளிக்க முடியும். மேலும், போட்டியின் போது 36 டிகிரி வெயில் அடிக்கும் என்பதால் மழைக்கு வாய்ப்பே இல்லை.
கடந்த மூன்று முறை இங்கு நடந்த போட்டிகளில் முதல் இன்னிங்க்ஸில் 287, 296 மற்றும் 291 ரன்கள் குவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, முதலில் பேட்டிங் செய்வது சாதகமான விஷயம். ஆனால், இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது.
தென்னாப்பிரிக்க அணி இந்த மைதானத்தில் நடைபெற்ற எந்த போட்டியிலும் இதுவரை தோல்வியே சந்தித்ததில்லை. எனவே, இந்திய அணி இந்தப் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாமே சரியாக இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் இந்தியஅணியில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பேட்டிங்கில் கே எல் ராகுல், சாய் சுதர்ஷன் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு இருக்கின்றனர். மற்ற பேட்ஸ்மேன்களும் மூன்றாவது போட்டியில் கை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.