ஜோஹன்னஸ்பெர்க் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
மூன்றாவது டி20 போட்டி நடக்க உள்ள பிட்ச் ரன் குவிப்புக்கு சாதகமான பிட்ச் என்பதால் இந்திய அணி சேஸிங் செய்தால் வெற்றி உறுதி என கருதப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று உள்ளது. முதல் போட்டி மழையால் கை விடப்பட்டது. இரண்டாவது போட்டியும் மழைக்கு நடுவே நடந்தது. அதனால், இரண்டாவதாக பந்து வீசிய இந்திய அணிக்கு சூழ்நிலைகள் கடும் சவாலாக இருந்தது.

குறிப்பாக, மழையால் ஈரமான பந்தை வைத்துக் கொண்டு வீச இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திணறினர். அதனால், இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால் டி20 தொடரை 2 - 0 என கைப்பற்றி விடும். இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்ற முடியாவிட்டாலும் சமன் செய்ய முடியும்.
இந்த நிலையில், மூன்றாவது போட்டி நடைபெற உள்ள ஜோஹன்னஸ்பெர்க் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமான மைதானமாக உள்ளது. மேலும், இந்தப் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு குறைவு என வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. அதனால், இந்திய அணிக்கு மழையால் கண்டம் இல்லை.
ஆனால், ஜோஹன்னஸ்பெர்க் பிட்ச்சை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரி ஸ்கோர் 173 ஆகும். அங்கு இயல்பாகவே அதிக ரன் குவிக்க முடியும். டாஸ் வெல்லும் அணி நிச்சயம் சேஸிங்கை தான் தேர்வு செய்யும் என கூறப்படுகிறது. அங்கு சேஸிங் செய்வது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். ஒருவேளை டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்தாலும், இந்திய அணிக்கு சரி சமமான வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
ஜோஹன்னஸ்பெர்க்கில் இதுவரை நடந்த டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 15 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 17 முறையும் வென்றுள்ளன. அதனால், டாஸில் தோற்றாலும் இந்திய அணிக்கு சரி சமமான வெற்றி வாய்ப்பு உள்ளது.