ஜோஹன்னஸ்பெர்க் : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக அணியை அறிவித்தார்.
மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது இந்திய அணியை அறிவித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறினார்.
இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் அணித் தேர்வில் தவறு செய்ததாக கடும் விமர்சனம் எழுந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டிக்கு முன் அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூர்யகுமார் யாதவ் தாங்கள் பயந்து போய் கிரிக்கெட் ஆட விரும்பவில்லை. பயமில்லாமல் தான் ஆடப் போகிறோம் என டாஸ் நிகழ்வின் போது கூறினார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது, இந்த நிலையில், மூன்றாவது போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது.
இரண்டாவது டி20 போட்டியில் சுப்மன் கில், திலக் வர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு, ஆஸ்திரேலிய டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், மூன்றாவது டி20யில் குறைந்தபட்சம் இவர்களில் ஒருவருக்காவது வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை என தைரியமான முடிவை எடுத்து இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.