கே.எல்.ராகுல் ஏமாற்றம்
கே.எல்.ராகுலும், மாயங் அகர்வாலும் பொறுப்புடன் தங்களது இன்னிங்சை தொடங்கினர் இதனையடுத்து,மாயங் அகர்வால் 3 பவுண்டரிகள் விளாச, இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது என ரசிகர்கள் நினைத்த நிலையில், கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று விட வேண்டிய பந்தை தொட்ட அகர்வால் 15 ரன்களில் வெளியேறினார்.
சீனியர்கள் நிதானம்
இதனால் முதல் 11 ஓவர் வரை விக்கெட்டே விழாமல் விளையாடிய இந்திய அணி, அடுத்த 10 பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பு சீனியர்கள் தலையில் வந்து விழுந்தது. இதனையடுத்து புஜாராவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை மேற்கொண்டது.
ரஹானே சொதப்பல்
புஜாரா 43 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். அதன் பின் களத்திற்கு வந்த ரஹானே 2 பவுண்டரிகளை விளாசினார், இருப்பினும் அவர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரஹானே மீது ரசிகர்கள் கோபமடைந்தனர். இந்திய அணி 116 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறிய.து இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட், கோலி ஜோடி 51 ரன்கள் சேர்த்தது.
223 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
50 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், மார்கோ ஜென்சன் வீசிய பந்தை நேராக ஃபில்டரிடம் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினும் 2 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய விராட் கோலி 79 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் கைக்கொடுக்காததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்க்கு 223 ரன்கள் எடுத்தது.தற்போது தென்னாப்பிரிக்காவை குறைந்த ரன்களில் சுருட்ட வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி பந்துவீசி வருகிறது.
தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கார் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 17 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது.