இன்றும் கோலியின் 71வது சதம் இல்லை!! 2 ஆண்டுகள் காத்திருப்பு தொடர்கிறது.! தனி ஒருவராக போராடிய கோலி
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று போராடினார்.
விராட் கோலி கடைசியாக 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக 70வது சதத்தை அடித்தார்.
அதன் பிறகு டெஸ்டில் 28 இன்னிங்சில்களாக விராட் கோலி சதம் அடிக்கவில்லை. இதனால் விராட் கோலி ரசிகர்கள் எப்போது தான் அவர் சதம் அடிப்பார் என எதிர்நோக்கி காத்திருந்தனர்.

மாறிய உலகம்
விராட் கோலி கடைசியாக சதம் அடித்த போது அவர் தந்தையாக இல்லை கொரோனா என்ற ஒரு நோய் உலகை அச்சுறுத்தவில்லை, குவாரண்டைன், லாக் டவுன் என்ற வார்த்தையே நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி செய்து கொண்டிருந்தார், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது, இப்படி கோலி சதம் அடிக்காத இந்த 2 ஆண்டுகளில் உலகம் பல மாற்றங்களை சந்தித்தது,

பழைய ஃபார்ம்
கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலியும் போதிய அளவில் ஒருநாள் போட்டியும் விளையாட வில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் தான் சதம் அடிக்க விராட் கோலியும் ஃபார்மில் இல்லாமல் திணறினார். இந்த நிலையில் மூன்றாவது டெஸ்டில் விராட் கோலி, தனது பழைய ஃபார்மை காட்டினார்

சூப்பர் ஷாட்கள்
பழைய கோலி திரும்பிவிட்டார் என மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் , இன்று 71வது சதம் கண்டிப்பாக வரும் என எதிர்பார்த்தனர். விராட் கோலியும் பொறுமையின் உருவமாக விளையாடினார். மோசமான பந்தை லாவகமாக பவுண்டரிகளுக்கு விளாசினார், விராட் கோலியின் ஷாட்களை காண நூறு கண்கள் வேண்டும். அந்த அளவுக்கு நேர்த்தியாக இருந்தது.

79 ரன்களில் ஆட்டமிழப்பு
டெஸ்டில் கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி அடித்த அதிகபட்ச ஸ்கோரையும் தாண்டினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிய, விராட் கோலி வேகமாக அடிக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடினார். இதில் வழக்கம் போல் கோலியின் குறையாக பார்க்க கூடிய 6வது ஸ்டம்ப் லைனுக்கு சென்ற பந்தை தொட்டு 79 ரன்களில் ஆட்டமிழந்தார். 201 பந்தை எதிர்கொண்ட கோலி,12 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசினார்.


Click it and Unblock the Notifications