லக்னோ: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே லக்னோவில் நடைபெறவிருந்த 4-வது டி20 போட்டி ரத்து செய்யப்பட்ட விவகாரம், தற்போது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. போட்டி ரத்துக்கு மூடுபனி காரணம் இல்லை என்றும், அது ஆபத்தான நச்சுப்புகை என்றும் கூறி உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மாநில பாஜக அரசை கடுமையாகச் சாடியுள்ளார்
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 17) இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் 4-வது டி20 போட்டி நடைபெற இருந்தது. ஆனால், மைதானம் முழுவதும் சூழ்ந்திருந்த அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக, டாஸ் கூட போடப்படாமல் போட்டி துரதிர்ஷ்டவசமாக ரத்து செய்யப்பட்டது. மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் அம்பயர்களுக்கு பிட்ச் கூட சரியாகத் தெரியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் ஆளுங்கட்சியான பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பதிவில், "டெல்லியின் மாசுபாடு இப்போது லக்னோவையும் எட்டியுள்ளது. அதனால்தான் லக்னோவில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவில்லை. உண்மையில் இதற்கு காரணம் மூடுபனி அல்ல, 'ஸ்மாக்' (Smog) எனப்படும் நச்சுக்காற்று" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த பதிவில், "லக்னோவின் சுத்தமான காற்றுக்காக நாங்கள் உருவாக்கிய பூங்காக்களையும், பாஜக அரசு அங்கு தேவையில்லாத நிகழ்ச்சிகளை நடத்தி நாசமாக்க நினைக்கிறது. பாஜகவினர் மனிதர்களுக்கும் நண்பர்கள் இல்லை, சுற்றுச்சூழலுக்கும் நண்பர்கள் இல்லை" என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
வழக்கமாக லக்னோ என்றாலே "சிரிங்கள்.. நீங்கள் லக்னோவில் இருக்கிறீர்கள்" என்ற வாசகம் தான் நினைவுக்கு வரும். ஆனால் அதனை கிண்டல் செய்யும் விதமாக அகிலேஷ் யாதவ், "முகத்தை மூடிக்கொள்ளுங்கள்.. நீங்கள் லக்னோவில் இருக்கிறீர்கள்" என்று தனது பதிவை முடித்துள்ளார்.
லக்னோவில் கிரிக்கெட் பார்க்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு போட்டி ரத்தானது ஏமாற்றத்தை அளித்த நிலையில், அகிலேஷ் யாதவின் இந்த ட்வீட் உத்தர பிரதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு இயற்கையான பனியை விட, சுற்றுச்சூழல் மாசுபாடே காரணம் என அவர் கூறியுள்ளது விவாதப் பொருளாகி இருக்கிறது.