லக்னோ: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லக்னோவில் நடக்கும் நான்காவது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்ற இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால் மழை இல்லை என்றாலும், புகை கலந்த பனிமூட்டம் ஆட்டத்திற்குத் தடையாக மாறியது.

லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தை புகை கலந்த அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்து இருந்ததால் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் எதிரில் சில அடி தூரம் பார்க்கவே திணறினர். இதன் காரணமாகத் திட்டமிட்டபடி மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்படவில்லை.
லக்னோவில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவவி வருகிறது. மைதானத்தில் பனிமூட்டம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், வர்ணனையாளர் அறையில் இருந்து பார்த்தால் எதிரே உள்ள இருக்கைகள் கூடத் தெரியாத அளவுக்குப் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. மைதானத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனையைப் பார்ப்பதே கடினமாக இருந்தது.
இந்தச் சூழலில் பந்தை பார்ப்பது கடினம் என்பதால் நடுவர்கள் டாஸ் நிகழ்வைத் தள்ளி வைத்தனர். மாலை 6.50 மணிக்கு சூழ்நிலையை அம்பயர்கள் முதல் முறையாக சூழ்நிலையை ஆய்வு செய்தனர். பின்னர் மீண்டும் 7.30 மணிக்கு ஆய்வு செய்வதாக அறிவித்து சென்றனர்.
பின்னர் மீண்டும் 7.30 மணிக்கு ஆய்வு செய்த அம்பயர்கள், 8 மணிக்கு மறுஆய்வு செய்வதாக அறிவித்தனர். அதன் பின் மீண்டும் ஆய்வு செய்த பின் 8.30 மணிக்கு நான்காவது முறையாக ஆய்வு செய்வதாக அறிவித்தனர். இவ்வாறாக ஆறு முறை வரை சென்றது இந்த ஆய்வு. இறுதியில் 9.25 அளவில் போட்டியை கைவிடுவதாக அம்பயர்கள் அறிவித்தனர். இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு கிரிக்கெட் போட்டி பனி மூட்டத்தால் கைவிடப்பட்டு இருக்கிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் ஐந்தாவது போட்டி அகமதாபாத் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா வென்றால் தொடரை 3 - 1 என கைப்பற்றலாம். தென்னாப்பிரிக்கா வென்றால் 2 - 2 என தொடரை சமன் செய்யலாம்.