ஜோஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டி ஜோஹன்னஸ்பெர்க் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்? வானிலை எப்படி இருக்கும்? என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான டி20 தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் நான்காவது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி நடைபெற உள்ள ஜோஹன்னஸ்பெர்க் நகரில் 40 சதவிகிதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், போட்டி மாலை நேரத்தில் நடைபெற உள்ள நிலையில் அப்போது 13 சதவிகிதம் மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது போன்ற நிலையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக, மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் போட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் முழுமையாக நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இந்த போட்டி நடைபெறும் போது 16 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும் எனவும், 31 சதவிகிதம் வானம் மேகமூட்டமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் போட்டி நடைபெற உள்ள ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் இதுவரை 26 சர்வதேச டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 13 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தின் பிட்ச் சரிசமமாக, சமநிலையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு வேகப் பந்துவீச்சு மட்டும் இல்லாமல், சுழற் பந்துவீச்சாளர்களும் விக்கெட்கள் வீழ்த்த முடியும். கடைசியாக இந்த மைதானத்தில் நடந்த சர்வதேச டி20 போட்டியில் இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தி இருந்ததே அதற்கு சிறந்த உதாரணம்.
இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் சராசரியாக 171 ரன்கள் எடுத்து உள்ளன. இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் சராசரியாக 145 ரன்கள் வரை எடுத்துள்ளன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தாலும், இரண்டாவது பேட்டிங் செய்தாலும் சரிசமமான வெற்றி வாய்ப்பு இருப்பதால் டாஸ் இந்தப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.