கொல்கத்தா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 சுழற் பந்துவீச்சாளர்களையும் மூன்று ஆல்ரவுண்டர்களையும் பயன்படுத்தி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
எனினும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 159 ரன்களில் ஆட்டம் இழக்க முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஒரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் நான்கு பவுலர்களை வைத்துதான் விளையாடுவோம்.

எப்போதாவது ஐந்து பவுலர்களை வைத்து விளையாடுவோம். ஆனால் கோலி அணிக்குள் வந்த பிறகு நான் ஐந்து பவுலர்களை வைத்து விளையாடுவேன் என்று கூறினார். அவர் புதிய பார்முலாவை உருவாக்கியது. ஆனால் தற்போது இருக்கும் அணி நிர்வாகம் 6 பவுலர்களை பயன்படுத்த போகிறோம் என்று சொல்கின்றது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அணியை எப்படி தேர்வு செய்வோமோ, அதைப்போல் தேர்வு செய்ய தொடங்கி விட்டோம். அதுவும் நம்பர் மூன்றாவது வீரர் களமிறங்கும் இடத்தில் ஆல்ரவுண்டரை வைத்திருக்கின்றோம். இந்த போட்டி முடிவடைந்த உடன் கண்டிப்பாக நாம் அனைவரும் சொல்லப்போவது இரண்டு பவுலர்கள் மிகக் குறைவாக பந்து வீசி இருக்கிறார் என்பதுதான்.
முதல் இன்னிங்சில் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு ஓவர்தான் வீசி இருக்கிறார். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றே புரியவில்லை. முதல் செஷனில் நமது வீரர்கள் 27 ஓவர்களை வீசி இருக்கிறார்கள். ஆறு பவுலர்களை பயன்படுத்தி இருக்கின்றோம். ஒரு நாள் கிரிக்கெட்டில் கூட இப்படி யாரும் பயன்படுத்திருக்க மாட்டார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கடுமையாக சாடிருக்கிறார். முதல் நாளில் ஜடேஜா எட்டு ஓவரும், அக்சர் பட்டேல் ஆறு ஓவர்களும், பும்ரா மற்றும் குல்தீப் தலச் 14 ஓவர்களும் சிராஜ் 12 ஓவர்களும் வாஷிங்டன் சுந்தர் ஒரு ஓவரும் வீசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.