மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருவது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். "சிராஜை ஏன் ஒரு டெஸ்ட் பிளேயராக மட்டும் மாற்றிவிட்டார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இளம் பந்துவீச்சாளர்கள் திணறி வரும் நிலையில், அனுபவ வீரரான சிராஜ் அணியில் இல்லாதது விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா மிக மோசமாக பந்து வீசியதை அடுத்து சிராஜ் ஏன் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, இந்தியத் தேர்வுக்குழுவின் முடிவைக் கண்டு தான் ஆச்சரியப்படுவதாகக் கூறியுள்ளார்.
"முகமது சிராஜை ஏன் நாம் ஒருநாள் போட்டி செட்-அப்பில் பார்ப்பதே இல்லை என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். டி20-யிலும் அவர் இல்லை. அவரைப் பையை பேக் செய்யச் சொல்லிவிட்டு, அவரை ஒரு 'ஒன்-பார்மட்' (டெஸ்ட் மட்டும்) பிளேயராக மாற்றிவிட்டார்கள். நாம் ஏன் இப்படிச் செய்கிறோம்? எனக்குத் தெரியவில்லை, ஆனால் இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்று சோப்ரா கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிராஜ் இடம்பெற்றிருந்தார். அதில் அவர் விக்கெட் வேட்டை நடத்தவில்லை என்றாலும், மிகவும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். அவரது எகானமி ரேட் ஓவருக்கு 4 முதல் 6 ரன்கள் என்ற அளவிலேயே இருந்தது. அப்படி இருக்கும்போது, அவரை ஏன் தென்னாப்பிரிக்கா தொடரில் சேர்க்கவில்லை என்பது சோப்ராவின் கேள்வியாக உள்ளது.
2023 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை தனி ஆளாக வீழ்த்தியவர் சிராஜ். ஒற்றை ஆளாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டவர். புதிய பந்தில் ஸ்விங் செய்வது, மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது எனத் திறமையான ஒரு பந்துவீச்சாளரை, காரணம் சொல்லாமல் ஓரம் கட்டுவது தவறு என்று சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், ராய்ப்பூர் போட்டியில் பார்த்தது போல, பனிப்பொழிவு இருக்கும்போது ரன்களைக் கட்டுப்படுத்த இவர்கள் திணறுகிறார்கள்.
"இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது சரிதான். ஆனால் சிராஜ் போன்ற ஒரு மேட்ச் வின்னரை முற்றிலுமாக ஒதுக்கி வைப்பது சரியான உத்தி அல்ல," என்பதே ஆகாஷ் சோப்ராவின் வாதமாக உள்ளது.