தர்மசாலா: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா இரண்டு மிகப்பெரிய சிக்ஸர் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் 18 பந்துகளில் 35 ரன்கள் (3 சிக்ஸர், 3 பவுண்டரி) விளாசிய அபிஷேக் சர்மா, டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 300 சிக்ஸர்களை அதிவேகமாக அடித்த இந்திய வீரர் என்ற கே.எல்.ராகுலின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார். 2025-ம் ஆண்டில் மட்டும் அபிஷேக் சர்மா 107 சிக்ஸர்களை விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த இந்தியர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 547 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அபிஷேக் சர்மா மிக இளம் வயதிலேயே 300 சிக்ஸர்களை எட்டி இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ரோஹித் சர்மாவின் 547 சிக்ஸர்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து கணக்கைத் தொடங்குவது அபூர்வமான விஷயம். ஆனால், அபிஷேக் சர்மா இதை ஒரு பழக்கமாவே வைத்துள்ளார். நேற்றைய போட்டியில் லுங்கி இங்கிடி வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று முறை முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஏற்கனவே, 2025 ஆசிய கோப்பையில் யுஏஇ மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்தச் சாதனையை அவர் செய்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் ரன்னை சிக்ஸர் அடித்து எடுத்தார்.
2025-ம் ஆண்டில் இதுவரை 40 டி20 போட்டிகளில் 1569 ரன்கள் குவித்து அபிஷேக் மிரட்டி வருகிறார். மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இன்னும் 46 ரன்கள் எடுத்தால், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் (1614 ரன்கள் - 2016-ல்) சாதனையை அவர் முறியடிப்பார். மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்று, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.