சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் விளாசி சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளார். 8 இன்னிங்ஸ்களாக சொதப்பி வந்த அவர், இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக அட்டாக் செய்து விளையாடியது பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கிய அபிஷேக் சர்மா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதன் காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு சரியான மாற்று வீரராக அபிஷேக் சர்மா இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருவதால், அந்த இடத்தில் அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அந்த வாய்ப்பை அபிஷேக் சர்மா கொஞ்சம் கூட கவனம் இல்லாமல் வீணடித்து வந்தார். வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் மோசமான ஷாட்களை விளையாடி ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் கொஞ்சம் கூட யோசனையோ, திட்டமோ இல்லாமல் விக்கெட்டை பறி கொடுத்தார்.
இதனால் அவர் ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்று விமர்சிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அபிஷேக் சர்மாவின் குருவான யுவராஜ் சிங், வெளிப்படையாகவே சில விமர்சனங்களை முன் வைத்தார். இந்த நிலையில் 3வது டி20 போட்டியில் மீண்டும் அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இம்முறை சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேற, திலக் வர்மாவுடன் அபிஷேக் சர்மா கூட்டணி அமைத்தார்.
2வது ஓவரிலேயே அட்டாக் செய்து பவுண்டரி, சிக்சர் என்று வெளுத்து கட்டினாலும், அதன்பின்னர் பவுண்டர் பந்துகளை கவனமாக எதிர்கொண்டார். கடந்த போட்டிகளை போல் அல்லாமல் இம்முறை அபிஷேக் சர்மாவின் அணுகுமுறையில் நிதானம் தென்பட்டது. 5வது ஓவரிலே இன்சைட் விலகி தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஷாட்ஸ் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா, ஸ்பின்னரான மஹாராஜ் பவுலிங்கில் 6, 4, 1 என்று விளாசி 24 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட அரைசதம் விளாசினார். இந்த 24 பந்துகளில் 8 பந்துகளை டாட் பால்களாக விளையாடி இருக்கிறார் அபிஷேக் சர்மா. இதன் மூலமாக கடந்த 8 இன்னிங்ஸ்களில் 70 ரன்கள் மட்டும் எடுத்திருந்த அபிஷேக் சர்மா, மாஸ் கம்பேக்கை கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.