அகமதாபாத்: உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மா, இந்திய வீரர் ஒருவர் ஒரு ஆண்டில் எடுத்த அதிகபட்ச டி20 ரன்கள் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 13 ரன்களில் தவறவிட்டார். 2025ஆம் ஆண்டில், அவர் இந்தியா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுக்காக 41 டி20 போட்டிகளில் மொத்தமாக 1602 ரன்கள் சேர்த்துள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது டி20ஐ போட்டியில், இந்திய அணிக்காகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய அபிஷேக், 21 பந்துகளில் 34 ரன்கள் அடித்து வெளியேறினார். ஆறு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி, சஞ்சு சாம்சனுடன் 5.4 ஓவர்களில் 63 ரன்கள் குவித்தார். பவர் ப்ளேயின் கடைசி ஓவரில் டி காக்கிடம் பிடிபட்டு ஆட்டமிழந்ததன் மூலம், நடப்பாண்டின் தனது கடைசிப் போட்டியில் சாதனை செய்யும் வாய்ப்பை இழந்தார்.

விராட் கோலி 2016ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என இரண்டு அணிகளுக்காக 31 டி20 போட்டிகளில் மொத்தமாக 1614 ரன்கள் குவித்தார். இதில், RCB அணிக்காக 16 ஐபிஎல் ஆட்டங்களில் 973 ரன்களையும், இந்திய அணிக்காக 15 டி20ஐ ஆட்டங்களில் 641 ரன்களையும் எடுத்திருந்தார்.
அபிஷேக் ஷர்மா 2025ஆம் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 14 ஐபிஎல் ஆட்டங்களில் 439 ரன்களையும், இந்திய அணிக்காக 21 டி20ஐ போட்டிகளில் 859 ரன்களையும், உள்நாட்டு அணியான பஞ்சாப் அணிக்காக 6 டி20 போட்டிகளில் 304 ரன்களையும் பதிவு செய்தார்.
ஒரு ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனையை, மேற்கிந்திய தீவுகளின் நிக்கோலஸ் பூரன் தன்வசம் வைத்துள்ளார். அவர் 2024இல் எட்டு அணிகளுக்காக 76 டி20 போட்டிகளில் 2331 ரன்கள் சேர்த்தார். முகமது ரிஸ்வானுக்குப் பிறகு (2021இல் 2036 ரன்கள்), ஒரு வருடத்தில் 2000 டி20 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் பூரன் ஆவார்.