தர்மசலா: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி தர்மசலாவில் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டில் இந்திய அணிக்கு இன்னும் 3 டி20 போட்டிகள் எஞ்சி உள்ளது. இந்த நிலையில் விராட் கோலியின் 9 ஆண்டு சாதனையை முறியடிக்க அபிஷேக் சர்மாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதை முறியடிக்க அபிஷேக் சர்மாவுக்கு இன்னும் 87 ரன்கள் தேவை.
இந்த ஆண்டில் 39 டி20 போட்டிகளில் 41.43 சராசரியில் 1,533 ரன்கள் குவித்து, மூன்று சதங்களையும் ஒன்பது அரை சதங்களையும் அபிஷேக் விளாசியுள்ளார்.2016ஆம் ஆண்டில், விராட் கோலி 31 ஆட்டங்களில் 89.66 சராசரியுடன் 1,614 ரன்கள் (நான்கு சதங்கள், 14 அரை சதங்கள்) குவித்து இந்தச் சாதனையை படைத்தார். தற்போது, அதை முறியடிக்க 87 ரன்கள் பின்தங்கியுள்ள அபிஷேக், இன்று தரம்சாலாவில் அந்த சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா , தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அபிஷேக் ஷர்மாவின் ஆட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கட்டாக்கில் நடந்த முதல் டி20யில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 175/6 ரன்கள் குவித்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சண்டிகரில், தொடக்க வீரராகக் களமிறங்கி எட்டு பந்துகளில் 17 ரன்கள் எடுத்த அபிஷேக், இரண்டு சிக்ஸர்களை விளாசினார். ஒரு சிக்ஸரின் மூலம், அவர் 50 டி20 சிக்ஸர்களைக் கடந்து , இந்திய பவர் ஹிட்டர்கள் பட்டியலில் இணைந்தார்.
சுப்மன் கில், சூர்யகுமார் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கின்றனர். போதாத குறைக்கு, நம்பர் 3வது வீரராக அக்சர் பட்டேல் களமிறங்குகிறார். இதனால், பவர்பிளேவில் ரன்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாட முயற்சி செய்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்து விடுகிறார். இது அவருக்கு தேவையில்லாத சுமையை ஏற்படுத்துவதாக சூர்யகுமாரே கடந்த போட்டியின் தோல்வியின் போது ஒப்புக்கொண்டார்.
சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கும் போது, எந்த நெருக்கடியும் இன்றி அபிஷேக் சர்மா விளையாடியதால், சாம்சனை தொடக்க வீரராக கொண்டு வாருங்கள் என்று ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை வழங்கிய டிவில்லியர்ஸ் அனைத்து பந்துகளிலும் சிக்சர் அடிக்க வேண்டும் என்று நினைப்பதை முதலில் கைவிடுங்கள் என்றும், அதற்கு அவசியமும் இல்லை என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். பந்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் விளையாடினாலே ரன்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.