ஜோஹன்னஸ்பர்க்: இந்திய அணியின் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரின் பேட்டிங்கையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்ததாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த டி20 தொடரில் ஆரம்பம் முதல் எங்களின் திட்டம் தெளிவாக இருந்ததாக கூறிய அவர், பவுலர்கள் மிரட்டலாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் வெற்றிக்கு இந்திய அணி விளையாடிய 3வது டி20 தொடரிலும் அபார வெற்றியை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் சதம் விளாசி அசத்தினர். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 18.2 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மண்ணில் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 18 போட்டிகளில் வென்று அசத்தி இருக்கிறது. இந்த வெற்றியால் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், சூழல் மற்றும் பிட்ச் இரண்டிற்கும் தகவமைத்து கொள்வதில் எந்த ரகசியமும் கிடையாது. எங்களின் திட்டம் தொடக்கத்தில் இருந்தே தெளிவாக இருந்தது.
கடந்த முறை தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போதும், இதே போன்ற ஸ்டைலில் தான் விளையாடினோம். அதனை அப்படியே தொடர வேண்டும் என்று நினைத்திருந்தோம். இந்தப் போட்டியில் எங்களின் பாசிட்டிவ் செயல்பாடுகளை தொடர வேண்டும் என்று நினைத்திருந்தோம். நிச்சயம் முடிவுகளை பற்றி எந்த சிந்தனையும் இல்லை. சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரின் பேட்டிங்கில் எந்த இன்னிங்ஸ் சிறந்தது என்று சொல்வது கடினமான ஒன்று.
ஆனால் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகிய மூவரின் பேட்டிங்கையும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அதேபோல் பவுலிங்கில் சொல்லி வைத்து வீழ்த்தி காட்டினார்கள். மைதானத்தில் வெளிச்சம் வந்த போது பிட்சில் நிச்சயம் ஸ்விங் இருக்கும் என்று கணித்திருந்தோம். ஏனென்றால் வானிலையில் சிறு மாற்றம் இருந்தது. அதனால் லைன் மற்றும் லெந்தில் கவனம் வைத்தோம். அதற்கான பலன்கள் கைமேல் கிடைத்தது.
ஐசிசி தொடரை வென்ற பின் மனதளவில் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த டி20 தொடரை பொறுத்தவரை சவால் நிறைந்த ஒன்று தான். அதனால் இந்த வெற்றி ஸ்பெஷலானது. பயிற்சியாளர்களை பொறுத்தவரை முதல் நாளில் இருந்து எங்களின் ஷோ-வை மகிழ்ச்சியாக அமர்ந்து பார்க்கிறார்கள். எப்படி படம் காட்ட வேண்டும் என்று வீரர்களுடன் பேசுகிறார்கள். இன்றைய ஆட்டத்திலும் கூட அவர்களின் மெசேஜ் ஒன்று தான். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, செய்யுங்கள் என்று நம்பிக்கையுடன் கூறியதாக தெரிவித்துள்ளார்.