அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். அவரது இந்த சறுக்கல் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் இந்திய அணி கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவருக்குச் சில முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
டி20 தரவரிசையில் முன்னணியில் உள்ள அபிஷேக் சர்மா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான கடந்த இரண்டு போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகக் குறுக்காக பேட்டை சுழற்றி தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். களமிறங்கிய முதல் பந்திலிருந்தே பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் அவருக்குத் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

அபிஷேக் சர்மாவின் ஆட்டம் குறித்து ஸ்ரீகாந்த் தனது யூடியூப் தளத்தில் விரிவாகப் பேசினார். தொடக்கத்திலேயே பெரிய ஷாட்களை ஆட முயற்சிக்காமல், சற்று நிதானத்தைக் கடைபிடிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில், "நீங்கள் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளீர்கள் என்றால், அடுத்த போட்டியில் களமிறங்கும் போது குறைந்தபட்சம் இரண்டு பந்துகளையாவது நிதானமாக எதிர்கொள்ள வேண்டும். ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளச் சிறிது நேரம் எடுத்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. தொடர்ந்து டக் அவுட் ஆகிறீர்கள் என்றால் உங்களிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அதை நீங்களே தான் சுயபரிசோதனை செய்து சரிசெய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதே சமயம், அபிஷேக் சர்மா தனது முழுமையான ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை என்றும் ஸ்ரீகாந்த் தெளிவுபடுத்தினார். "அபிஷேக் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஆரம்பத்தில் சற்று நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனம் நமது கட்டுப்பாட்டில் இல்லாத போதுதான், பந்தின் திசைக்குக் குறுக்காக ஷாட் ஆட முயற்சிப்போம்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஆட்டமிழந்த விதம் அவர் மிகுந்த பதற்றத்தில் இருப்பதைக் காட்டுவதாகவும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார். அவருடன் தொடக்க வீரராகக் களமிறங்கும் இஷான் கிஷன் எப்படி முதல் சில பந்துகளைப் புரிந்து கொண்டு பிறகு வேகமாக ரன் குவிக்கிறாரோ, அதேபோல அபிஷேக்கும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த், "ஏன் எல்லா பந்துகளையும் மைதானத்திற்கு வெளியே அடிக்க முயற்சிக்கிறீர்கள் அபிஷேக்? கிரீஸுக்குள் நின்று நான்கு பந்துகளைத் தற்காத்து ஆடுவதில் தவறில்லை. ஒரு வீரராகச் சில தனிப்பட்ட மாற்றங்களை நீங்கள் செய்துதான் ஆக வேண்டும். விளையாட்டு உலகம் மிகவும் கொடூரமானது. நீங்கள் நன்றாக விளையாடும் போது கொண்டாடும் மக்கள், இதுபோன்று சறுக்கும் போது கடுமையாக விமர்சிப்பார்கள்" என்று எச்சரித்தார்.
இந்தத் தொடரின் நடுவே அபிஷேக் சர்மா கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அணி நிர்வாகம் அவருக்கு முழு ஆதரவு அளித்தாலும், மேலும் சில போட்டிகளில் அவர் ரன் எடுக்கத் தவறினால் அது அவருக்குப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். இந்திய அணி ஞாயிறு அன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா தனது பழைய ஆட்டத்திற்குத் திரும்புவாரா?