ஜோஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ந்து 2 முறை டக் அவுட்டாகிய பின், தேவையில்லாத சிந்தனைகள் தலைக்குள் ஓடியதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். அதேபோல் திலக் வர்மா மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் என் மீதான அழுத்தத்தை குறைத்துவிட்டதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் அபார சதம் விளாசி புதிய சாதனையை படைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் - திலக் வர்மா இருவரும் 86 பந்துகளில் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஏராளமான சாதனைகளை முறியடித்தனர். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய அணியின் சஞ்சு சாம்சன் பேசுகையில், என் வாழ்க்கையில் ஏராளமான தோல்விகளை சந்தித்துள்ளேன். கடைசியாக 2 சதங்களை தொடர்ச்சியாக விளாசிய பின், அடுத்த 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறேன். இதனால் என் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து கடினமாக உழைத்ததற்கு சரியான பலன் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து 2 முறை டக் அவுட்டான பின், ஏராளமான சிந்தனைகள் தலைக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.
இந்த இன்னிங்ஸில் அபிஷேக் சர்மா எனது அழுத்ததை முதல் சில ஓவர்களில் குறைத்துவிட்டார். அதேபோல் திலக் வர்மாவும் அழுத்தம் அருகில் வர கூட அனுமதிக்கவில்லை. அவருடன் ஏராளமான முறை இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறேன். இந்திய அணியின் எதிர்கால வீரரான அவருடன் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை அதிகமாக பேச விரும்பவில்லை.
ஏனென்றால் கடந்த முறை சதம் விளாசிய போது அதிகமாக பேசிவிட்டேன். அதன்பின் 2 முறை டக் அவுட்டாகினேன். அதனால் இம்முறை எளிமையாக வைத்து, அடுத்து என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். எங்களின் கேப்டன் இப்படியான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார். அதனை எட்டியதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.