ஜொகன்னஸ்பர்க்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் வீரராக வளர்ந்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 55 பந்துகளில் சதம் விளாசியதன் மூலமாக, டி20 கிரிக்கெட்டில் 4வது சதத்தை விளாசினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா சாதனையை சமன் செய்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் 4 சதங்களை விளாசி முதலிடத்தில் இருந்தனர். தற்போது சூர்யகுமார் யாதவ் 4வது சதத்தை விளாசி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மண்ணிலும் சதம் விளாசி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவின் செயல்பாடுகள் இந்திய ரசிகர்களிடையே திருப்தியை கொடுத்துள்ளது. ஏனென்றால் 2வது போட்டியில் தோல்வியடைந்தாலும் எந்த பதற்றமும் இல்லாமல் குறிப்பாக பிளேயிங் லெவனை மாற்றாமல் விளையாடியது அவரின் முதிர்ச்சியையும், வீரர்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையையும் நன்றாக பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் சதம் விளாசியதால் ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கு அளிக்கப்பட்டது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ள 14வது ஆட்ட நாயகன் விருதாகும். இதுவரை 60 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். இதன் மூலமாக அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 115 டி20 போட்டிகளில் விளையாடி 15 முறை ஆட்டநாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். இதனால் விரைவில் விராட் கோலியின் இந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. அண்மையில் டி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.