டெல்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. உலகக்கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். அதேபோல் அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளதால், டி20 அணியில் யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 அணியில் விளையாடிய அணியில் பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், ஆவேஷ் கான், சிவம் துபே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் இந்திய டி20 அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடர் நெருங்கும் போது இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு பெற்று வந்தார். அதேபோல் தற்போது டி20 தொடர் நெருங்கி வரும் சூழலில், ஒருநாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 13 சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. அதில் ஏற்கனவே ஆஸ்திரேலியா உடனான 5 போட்டிகளில் சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பிசிசிஐ திட்டத்தில் இல்லை என்று பார்க்கப்படுகிறது.
இதனால் சஞ்சு சாம்சன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சஞ்சு சாம்சனை ஊறுகாய் போன்று இந்திய அணி நிர்வாகம் பயபடுத்தி வருவதாகவும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். அதேபோல் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல ஆட்டத்தை விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது.