ராய்ப்பூர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய எய்டன் மார்க்கரம் தான். 98 பந்துகளை எதிர்கொண்ட அவர் 110 ரன்கள் சேர்த்து தென்னாப்பிரிக்காவுக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
கடந்த போட்டியில் டாப் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த சூழலில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த தவறை தென்னாப்பிரிக்க அணி சரி செய்தது.

இது குறித்து ஆட்டநாயகன் விருது வென்ற மார்க்கரம், நாம் எப்போதுமே கடந்த போட்டிகளில் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அதை தான் நாங்கள் செய்தோம். முதலில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகி கடும் சவாலை ஏற்படுத்தும் என்று நினைத்தோம்.
நாங்கள் பேட்டிங் செய்யும்போது, அந்த சவாலை அபாரமாக எதிர்கொண்டோம். கடந்த போட்டியில் எங்களுடைய நடுவரிசை வீரர்கள் எப்படி பேட்டிங் செய்வார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம். டாப் பரிசை வீரர்கள் மட்டும் கொஞ்சம் ரன்கள் அடித்து இருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம் என்பதால் இந்த ஆட்டத்தில் அந்த தவறை சரி செய்தோம்.
முதல் சில ஓவர்களை எதிர்கொண்ட பிறகு பேட்டிங்கில் எப்படி விளையாட வேண்டும் என்று ஒரு வழி கிடைக்கும். அதை பயன்படுத்திக் கொண்டு எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். நானும் கேப்டன் பவுமாகவும் எங்களுடைய ஷாட்களை ஆட முயன்றோம். எங்களில் ஒருவர் ஆட்டம் இழந்தால் புதிதாக வரும் வீரர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.
இந்த இலக்கை வெற்றிகரமாக துரத்திய எங்கள் அணி வீரர்களின் நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். அதும் கடும் அழுத்தம் ஏற்பட்டது. எங்கள் அணியில் எட்டு நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். கேசவ் மகாராஜா கூட பேட்டிங் செய்வார். எங்களுடைய பவுலர்களும், பேட்டர்களும் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கிரிக்கெட் ஸ்டைலாக இருக்கிறது. எங்கள் அணி வீரர்கள் பலரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாடுகிறார்கள்.
எங்கள் டாப் வரிசை வீரர்களும் ரன்களை சேர்த்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். தற்போது தொடக்க வீரராக களம் இறங்கி வருகின்றேன். ஆரம்பத்தில் புதிய பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். பில்டிங்கில் முதல் பத்து ஓவருக்கு சில கட்டுப்பாடுகளும் இருக்கும். சவாலாக இருந்தாலும் தொடக்க வீரன் என்ற பொறுப்பை நான் மீண்டும் நேசிக்க தொடங்கி விட்டேன் என்று மார்க்கரம் கூறியுள்ளார்.