தர்மசாலா: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுத் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. ஆனால், போட்டிக்கு நடுவே வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கேட்சை விட்டதும், அதைக் கண்டு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கோபமடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் 13-வது ஓவரில் சிவம் துபே பந்துவீசினார். தென்னாப்பிரிக்க வீரர் டோனோவன் ஃபெரீரா அடித்த பந்து லாங்-ஆன் திசையில் சென்றது. அர்ஷ்தீப் சிங் ஓடி வந்து கேட்சை பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவர் கையில் சிக்காமல் நழுவியது.

ஏற்கனவே கடந்த போட்டியில் 7 வைடுகள் வீசி கம்பீரை கடுப்பேற்றிய அர்ஷ்தீப், இம்முறை எளிதான கேட்சை விட்டதும், கம்பீர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். கேமராக்கள் டிரஸ்ஸிங் ரூமை காட்டியபோது, கம்பீர் அதிருப்தியுடன் கத்திய காட்சியை காண முடிந்தது.
கேட்ச் விட்டாலும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் இன்று கலக்கினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை (ஹென்ரிக்ஸ், மார்க்ரம்) வீழ்த்தினார். எகானமி ரேட் 3.20. கடந்த போட்டியில் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு, ஒரு வைடு கூட வீசாமல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, இந்திய பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 117 ரன்களுக்குச் சுருண்டது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் சேர்த்து மட்டும் தனி ஆளாகப் போராடினார். எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு அபிஷேக் சர்மா (35), சுப்மன் கில் (28) நல்ல தொடக்கம் கொடுத்தனர். திலக் வர்மா (25*), சிவம் துபே (10*) ஆகியோர் பொறுப்புடன் ஆடி 15.5 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெறச் செய்தனர். இந்தத் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கும் இந்தியா, அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.