கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. 176 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா துரத்தியபோது ஆட்டத்தின் முதல் ஓவரிலே அர்ஸ்தீப் சிங், குயிண்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
அதேபோன்று மற்றொரு அபாயகரமான வீரரான டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் விக்கெட்டையும் அர்ஸ்தீப் வீழ்த்தினார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது குறித்து ரவி சாஸ்திரி நடத்திய நேர்காணலில், அர்ஸ்தீப் சிங் பேசினார்.

அதில், என்னுடைய திட்டம் முறை என்பது மிகவும் சிம்பிள். களத்திற்கு சென்று ஆடுகளத்தில் ஏதேனும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருந்தால், அதை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். இந்த ஆடுகளத்தில் பந்தை நன்றாக வேகத்துடன் வீசினால், ஆடுகளம் ஏதேனும் உதவி செய்யும் என்று நினைத்தேன்.
ஆடுகளத்தில் பெரிய அளவு பவுன்ஸ் இல்லை. எனவே பந்தின் சீமை பயன்படுத்தி ஆடுகளத்தின் உதவியை நான் பயன்படுத்திக் கொண்டேன். முதல் விக்கெட்டை நன்றாக ஃபுல் லெந்தில் வீசி எடுத்தேன். அதன் பின் ஒரு பவுண்டரி சென்றது. இதனை அடுத்து ஒரு ஷார்ட் பால் வீசி பார்க்கலாம் என்று நினைத்தேன்.
அது விக்கெட்டாக மாறியது. பும்ரா 100 விக்கெட் எடுத்தவுடன் அவரிடம் சென்று 100 விக்கெட் கிளப்புக்கு உங்களை நான் வரவேற்கிறேன் என்று கூறினேன். உடனே அதற்கு அவர் சிரித்தார்.( பும்ராவுக்கு முன் அர்ஸ்தீப் 100 விக்கெட் எடுத்தார்) பவுலர்கள் அனைவரும் தங்களது பணியை சரியாக செய்தால் அது கேப்டனுக்கு சுலபமாக மாறிவிடும்.
பவுலர்களை எப்படி வேண்டுமானாலும் கேப்டன் அதன்பின் பயன்படுத்தலாம். பவர் பிளேவில் பும்ரா அல்லது நான் மூன்று ஓவர்கள் கூட வீச முடியும். இதன் மூலம் கேப்டனுக்கு பவுலர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் சுதந்திரம் கிடைக்கும். நாங்கள் அணியில் ஒருவருடன் ஒருவர் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம்.
அணியில் சந்தோஷமாக இருக்க வேண்டும். இது போன்ற ஆடுகளத்தில் விளையாடுவது என்பது மிகவும் அரிது. விக்கெட்டுகளை எடுக்க கொஞ்சம் பொறுமை அவசியம். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது என்று ரொம்பவும் எதிர்பார்த்து பந்து வீசக்கூடாது. லயன் மற்றும் லெங்தில் சரியாக வீச வேண்டும் என்று அர்ஸ்தீப் சிங் கூறினார்.