முதல்தர கிரிக்கெட்டில் கூட இப்படி நடக்கல.. முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்!
ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணியில் உள்ள ஒரே இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்றால் அது அர்ஷ்தீப் சிங். அண்மை காலமாக நோ-பால் பிரச்சனையால் தவித்து வந்த அர்ஷ்தீப் சிங், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வந்தார். உலகக்கோப்பை தொடருக்கு பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.

அதேபோல் ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளே ஓவர்களில் பந்துவீசி வந்த அர்ஷ்தீப் சிங், சரியான ஸ்விங் கிடைக்காமல் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வந்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்த போது, அர்ஷ்தீப் சிங்கே இதனை ஏற்று கொண்டார். எனது திறமைக்கேற்ப நான் சிறப்பாக விளையாடவில்லை என்று கூறியிருந்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அதே நிலைமை தான் நீடித்தது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் அர்ஷ்தீப் சிங் மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் வாய்ப்பு கொடுத்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டி வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே ஹென்ரிக்ஸ் மற்றும் வான்டர் டூஸன் இருவரையும் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான டோனி டீ-யை 28 ரன்களில் வீழ்த்திய அவர், கிளாஸன் மிகச்சிறந்த பந்தின் மூலம் போல்ட் எடுத்தார். இதனால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த அர்ஷ்தீப் சிங், 5வது விக்கெட்டை வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனென்றால் அர்ஷ்தீப் சிங் இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் கூட 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. இந்த நிலையில் 9 ஓவர்களை வரையிலும் அவரால் 5வது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
இந்த நிலையில் தனது கடைசி ஓவரின் முதல் பந்தில் பெலுக்வாயோவை 33 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அர்ஷ்தீப் சிங் முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 10 ஓவர்கள் வீசிய அவர் 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். மேலும் இது அவரின் மிகச்சிறந்த பந்துவீச்சில் ஒன்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, December 17, 2023, 16:14 [IST]
Other articles published on Dec 17, 2023


Click it and Unblock the Notifications