மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நாளை கட்டாக்கில் விளையாடுகிறது. சூரிய குமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கு அணியை தயார் செய்யும் விதமாக இந்த தொடரை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தி கொள்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஒரு நாள் தொடரில் ஓய்வில் இருந்த நிலையில் தற்போது டி20 தொடருக்கு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவும் அணிக்கு திரும்பியிருக்கிறார். இதனால் இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வெறும் மூன்று வேகப்பந்துவீச்சாளரை வைத்து களமிறங்க முடிவு எடுத்திருக்கிறது.

பும்ரா, ஹர்திக் பிறகு அந்த மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங்கா இல்லை ஹர்ஷித் ராணாவா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை ஆர்ஸ்தீப் சிங் பெற்று இருக்கிறார்.
இதுவரை 68 போட்டிகளில் விளையாடி 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல ஆர்ஸ்தீப் சிங் முக்கிய காரணமாக இருந்தார். அது மட்டும் அல்லாமல் டி20 கிரிக்கெட்டில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
ஆர்ஸ்தீப் சிங் மறுமுனையில் இருந்தும் பந்து வீசினால் அது எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளில் கூட மொத்தமாக அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால் இந்திய அணி மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை களம் இறக்கினால் பேட்டிங் வரிசையில் வெறும் ஏழு பேருக்கு மட்டும் தான் பேட்டிங் தெரிந்திருக்கும்.
இதனால் பேட்டிங் ஓரளவுக்கு தெரிந்த ஒரு பந்துவீச்சாளர் தேவை என்பதால் கௌதம் கம்பீர் ஹர்ஷித் ரானாவை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கலாம். கம்பீரின் செல்லப் பிள்ளையான ஹர்ஷித் ரானாவுக்கு தான், அவர் முன்னுரிமை வழங்க வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக ஆர்ஸ்தீப் சிங் இந்திய டி20 அணியில் இடம் பெற மாட்டார் என கூறப்படுகிறது. ஆனால் பலரும் பும்ராவுடன் ஹர்சித் ராணா இடம்பெறுவதை விட ஆர்ஸ்தீப் சிங் இருப்பது தான் சரியான முடிவாக இருக்கும் என்று கம்பீருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.