மும்பை: விராட் கோலியின் சதத்திற்கு பிறகு ரோஹித் ஷர்மா கொண்டாடியபோது அவர் என்ன பேசினார் என்பது குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தற்போது விளக்கமளித்துள்ளார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை எட்டி, விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்தார்.
ராஞ்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்து, இந்திய அணி 349 ரன்கள் எடுக்க அடித்தளமிட்டார். விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்தார். ரோகித் ஆட்டமிழந்த பிறகு மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து விராட் தனது 83வது சர்வதேச சதத்தைப் பூர்த்தி செய்ததும், டிரஸிங் ரூம்மில் அமர்ந்திருந்த ரோஹித், பெரும் உற்சாகத்தில் ஆவேசமான வார்த்தைகளை கூறினார்.

மைதானத்தில் விராட் குதித்து கொண்டாடிய போது, ரோஹித்தும் தீவிர உற்சாகத்தில் மிதந்தார். இந்திய கிரிக்கெட்டின் இந்த இரு ஜாம்பவான்களின் கொண்டாட்டம் இணையம் முழுவதும் வைரலானது. ரோஹித் சரியாக என்ன சொன்னார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
அவரது வார்த்தைகளை இணையம் தீவிரமாகத் தேடிய நிலையில், அர்ஷ்தீப் சிங் இதற்கு ஒரு வேடிக்கையான விளக்கத்தை அளித்தார். அவர் நேரடியாகக் குறிப்பிடாமல், பிரபலமான இந்தி மீம் வசனமான "முஜே நாடியா பசந்த் ஹை" (இந்தியில் நதியாவை பிடிக்கும் என்று அர்த்தம்) என்பதை குறிப்பிட்டு தனது பதிலைத் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங் , "விராட் பாய் சதம் அடித்த பிறகு, ரோஹித் பாய் என்ன சொன்னார் என்று எனக்கு பல மெசேஜ்கள் வந்தன. அவர், 'நீலி பரி, லால் பரி, கம்ரே மே பந்த், முஜே நாடியா பசந்த்' என்று சொன்னார். (இது எதோ ஹிந்தி ஜோக்)
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரோஹித் மற்றும் விராட் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து, அவர்களின் சர்வதேச எதிர்காலம் மற்றும் இருவரும் 2027 உலகக் கோப்பையில் பங்கேற்க முடியுமா என்பது குறித்த விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அவர்கள் இருவரும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடக் கேட்டுக் கொள்ளப்படலாம் என்று பல செய்திகள் பரவி வருகின்றன. மேலும், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் இந்த இரு ஜாம்பவான்களின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
டிரஸிங் ரூம் சிறப்பாக இல்லை என்றும், ரோஹித், விராட் மற்றும் கம்பீர் இடையே பெரிய அளவில் உரையாடல்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், குல்தீப் யாதவின் நான்கு விக்கெட்டுகள் உதவியுடன் தென்னாப்பிரிக்காவை 332 ரன்களுக்கு சுருட்டி, இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.