சந்திகார்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் கோல்டன் டக் ஆன நிலையில் நம்பர் மூன்றாவது இடத்திற்கு அக்சர் பட்டேல் பேட்டிங் செய்ய வந்தது ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவதையே பயிற்சியாளர் கம்பீர் ஒரு வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவிக்கும் கம்பீர், டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் என்பது எப்போதுமே ஒரு overrated ஆன ( மிகைப்படுத்தப்பட்ட) விஷயம். டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

இதை தான் எனது வீரர்களிடம் நான் கேட்பதாக கம்பீர் பலமுறை கூறியிருக்கிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பேட்டிங் வரிசையை இப்படி அடிக்கடி மாற்றினால், அணியில் நிலையற்ற தன்மை உருவாகும் என்றும், உலகக்கோப்பைக்கு முன்பு இதுபோல் விஷயங்களை செய்தால் அது உங்களுக்கே ஆப்பாக முடிந்துவிடும் என்றும் விமர்சித்து இருக்கின்றனர்.
ஆனால் இதையெல்லாம் கம்பீர் காதில் கொஞ்சம் கூட கேட்டுக் கொள்ளவே இல்லை. இந்த ஆட்டத்தில் கில், ஆட்டம் இழந்தவுடன் திலக் வர்மா அல்லது சூரிய குமார் ஆகியோர் பேட்டிங் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்சர் பட்டேல் களத்திற்கு வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். பட்டேல் 21 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்கள் தான் சேர்த்தார்.
இது பவர் பிளேவை வீணடிக்கும் விஷயமாக மாறிவிட்டது. அந்த இடத்தில் திலக் வர்மாவோ, அல்லது சூரியகுமார் யாதவோ முன்பே வந்திருந்தால் தங்களை கொஞ்சம் நிலை நிறுத்திக் கொண்டு அதிரடி காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் அக்சர் பட்டேல், பவர் பிளேவை வீணடித்து விட்டார்.
இதன் மூலம் அபிஷேக்சர்மாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அடித்து ஆட வேண்டும் என நினைத்து அவர் தனது விக்கெட்டை விரைவாக கொடுத்துவிட்டார். கம்பீர் செய்யும் இந்த விஷயம் மிகவும் தவறு என்றும், இதை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் கம்பீரையே மாற்றுவது தான் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.