மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 214 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி துரத்தியபோது, கில் ஆட்டத்தின் முதல் ஓவரிலே ஆட்டம் இழந்தார். இதனால் மூன்றாவது விக்கெட்டுக்கு அக்சர் பட்டேல் களமிறங்கப்பட்டார்.
இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான உத்தப்பா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தப்பா, நான் பலமுறை சொல்லி விட்டேன். பவர்பிளேக்குள் விக்கெட்டுகள் விழுந்தால் பேட்டிங் வரிசையில் யார் களமிறங்க வேண்டுமோ,அவர்கள் தான் பேட்டிங் செய்ய வர வேண்டும்.

பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவது கொஞ்சம் கூட சரி இல்லை. மூன்றாவது வீரராக திலக் வர்மா வந்திருந்தால் அவர் பவர் பிளேவில் இன்னும் அதிரடி காட்டி இருக்க முடியும். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பேட்டிங் வரிசையில் விளையாடினால் எப்படி அந்த வீரரால், ரன்குவிக்க முடியும்.
குழப்பம் மட்டுமே நீடிக்கும். இது மிகவும் தவறான முன் உதாரணம் ஆகும். சரி அக்சர் பட்டேல் களம் இறக்கினீர்களே அவர் என்ன பெரிய ஷாட் ஆடக்கூடிய வீரரா? இல்லை அவர் அப்படித்தான் பவர் பிளேவில் விளையாடினாரா? அவர் பவர் பிளேவை வீணடித்துவிட்டு சென்றுவிட்டார். சூரியகுமார் யாதவ் பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலை அளிக்கும் விதமாக இருக்கின்றது.
டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கின்றது. பேட்டிங்கில் அவர் ரன்கள் சேர்த்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெறும். கடந்த ஒரு ஆண்டாகவே அவர் பேட்டிங்கில் சரியாக விளையாடவில்லை. அதற்கு முக்கிய காரணம் பேட்டிங் வரிசையை அடிக்கடி மாற்றுவது மட்டும்தான்.
இந்திய அணி வெற்றி பெறும் வரை பேட்டிங்கில் அவர் சொதப்புவது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் இந்திய அணி தோற்க ஆரம்பிக்கும் போது, அவர் மீது பல விமர்சனங்கள் எழும்ம் களத்தில் அவருடைய உடல் மொழி அனைத்துமே மாறும். நாம் சரியாக ரன்கள் சேர்க்கவில்லையே என்ற நினைப்பு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் களத்தில் ஒரு கேப்டனாக முடிவெடுக்க சூரியகுமார் யாதவ் தடுமாறுவார் என்று உத்தப்பா கூறியுள்ளார்.