IND vs SA: கம்பீர் பவரை குறைக்க பிசிசிஐ முடிவு.. இனி அணி தேர்வில் கேப்டனே முடிவு எடுக்கலாம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவி வருகிறது. இதனால் கம்பீர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால், அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது பிசிசிஐ உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் இரண்டாவது டெஸ்ட் தொடரை இழந்த பின்னர் தனது எதிர்காலம் குறித்து பிசிசிஐதான் முடிவு செய்ய வேண்டும் என கம்பீர் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தான் பிசிசிஐ இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி, தலைமை பயிற்சியாளர் அல்லது தற்போதைய வீரர்களுக்கு எதிராக உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.இது குறித்து கருத்து தெரிவித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், வரவிருக்கும் உலகக் கோப்பைகளுக்கு முன் கம்பீரின் எதிர்காலம் குறித்து வாரியம் எந்த முடிவும் எடுக்காது என்று கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் 0-2 தோல்வி, கம்பீரின் கீழ் அணியின் மூன்றாவது டெஸ்ட் தொடர் தோல்வியாகும். இதற்கு முன்னர், நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நிய மண்ணிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் 0-3 என உள்நாட்டில் தோற்ற பிறகு, தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.
கம்பீர் பயிற்சியின் கீழ் சொந்த மண்ணில் பெற்ற ஒரே டெஸ்ட் தொடர் வெற்றிகள் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரானவை ஆகும். இந்த விவகாரம் குறித்து பேசிய அந்த பிசிசிஐ அதிகாரி "பயிற்சியாளர் கௌதம் கம்பீரை பொறுத்தவரை, உலகக் கோப்பை நெருங்கி வருவதாலும், அவரது ஒப்பந்தம் 2027 உலகக் கோப்பை வரை இருப்பதாலும் நாங்கள் எந்த முடிவும் எடுக்க மாட்டோம். பிசிசிஐ தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தப்படும். ஆனால் எந்த ஒரு உடனடி நடவடிக்கையும் இருக்காது." என்றார்.
வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயாரிக்க சொன்னது போன்ற விசயங்கள் கம்பீருக்கு எதிராக திரும்பியுள்ளது. இந்த சூழலில் கம்பீரின் பவரை குறைப்பது, கேப்டனுக்கு அணித் தேர்வில் அதிக பவர் வழங்குவது உள்ளிட்ட முடிவுகளை பிசிசிஐ எடுக்கபோகிறது. இதன் முலம் கம்பீரே தனது பதவியை ராஜினாமா செய்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications