மும்பை : இந்தியாவின் சிறந்த ஸ்விங் வீசும் வேகப் பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் ஃபார்மில் இல்லை எனக் கூறி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அணியில் இருந்து நீக்கியது பிசிசிஐ தேர்வுக் குழு.
ஆனால், புவனேஸ்வர் குமார் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். ஆனால், அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் அநீதி இழைத்துள்ளது பிசிசிஐ. இத்தனைக்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் முகமது ஷமி காயம் காரணமாக ஆடுவது சந்தேகம் தான். ஷமி பெயர் டெஸ்ட் அணியில் இடம் பெற்றாலும் அவர் சிகிச்சையை பொறுத்தே இறுதி அணியில் சேர்க்கப்படுவார்.
குறைந்தபட்சம் ஷமிக்கு மாற்று வீரராக அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமாரை தேர்வு செய்து இருக்கலாம். ஆனால், அவருக்கு இந்தியா ஏ அணியில் கூட இடம் அளிக்கவில்லை பிசிசிஐ.

புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி என மூன்று இணைபிரியா வேகப் பந்துவீச்சாளர் கூட்டணி சில ஆண்டுகளுக்கு முன் வரை கிரிக்கெட் உலகில் பெரும் புகழோடு கோலோச்சி வந்தது. ஆனால், இடையே புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டு அடிக்கடி அணியில் இருந்து நீக்கப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் 2022ஆம் ஆண்டின் போது அவரது ஃபார்ம் சரியில்லை எனக் கூறி அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் சமீபத்தில் நடந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் புவனேஸ்வர் குமார் 7 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தார். அந்த டி20 தொடரில் ஓவருக்கு சராசரியாக 5.84 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார்.
அடுத்து நடந்த விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் புவனேஸ்வர் குமார் 4 போட்டிகளில் 10 விக்கெட்கள் வீழ்த்தினார். இதில் ஒரு ஓவருக்கு சராசரியாக 4.52 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார் இப்படி டி20, ஒருநாள் போட்டி என இரண்டிலும் நல்ல ஃபார்மில் இருக்கும் புவனேஸ்வர் குமாருக்கு குறைந்தபட்சம் அவரை நிரூபிக்க ஒரு வாய்ப்பு தரும் வகையில் இந்தியா ஏ அணியிலாவது எடுத்து இருக்கலாம். ஆனால், பிசிசிஐ அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் அநீதி இழைத்துள்ளது.