டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், பவுலர்கள் செயல்பட்ட விதத்தை நினைத்து பெருமை கொள்வதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதன் மூலமாக இந்திய அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி விளையாடிய 11 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று வந்த நிலையில், இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல் முழு நேர கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்ற பின், இந்திய அணி அடையும் முதல் தோல்வி இதுவாகும்.
பேட்டிங்கின் போது இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிகளவிலான டாட் பால்களை விளையாடியதே தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது. மொத்தமாக 62 டாட் பால்களை இந்திய அணி பேட்ஸ்மேன்கள் விளையாடியுள்ளனர். அதிலும் கடைசி 2 ஓவர்களில் மட்டும் 8 டாட் பால்களை ஹர்திக் பாண்டியா விளையாடி இருக்கிறார்.
இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், முதல் பேட்டிங் ஆடும் போது பேட்ஸ்மேன்களால் எந்த ரன்கள் சேர்க்க முடிகிறதோ அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். டி20 கிரிக்கெட்டில் 125 ரன்களோ அல்லது 140 ரன்கள் எடுப்பதையோ விரும்ப மாட்டோம். ஆனால் இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது.
இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம். டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்ல வேண்டும். மிகச்சிறந்த பவுலிங்கை வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் 2 போட்டிகளில் மீதமுள்ளது. ஜொகன்னஸ்பர்க் செல்வதை நினைத்து உற்சாகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.