
இந்தியா முதல் இன்னிங்க்ஸ்
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்து இருந்தது. கோலி 254*, மயங்க் அகர்வால் 108 ரன்கள் குவித்து இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா பேட்டிங் சரிவு
பேட்டிங் செய்ய ஏற்ற ஆடுகளம் என இந்தியாவின் ஆட்டத்தை பார்த்து பலரும் கூறிய நிலையில் தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் வரிசை சீட்டுக் கட்டாக சரிந்தது. 53 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

பின்வரிசை ஜோடி
பின் 162 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது. 200 ரன்களுக்குள் அந்த அணி தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலாண்டர் - கேஷவ் மகாராஜ் ஜோடி 109 ரன்கள் கூட்டணி அமைத்தனர். தென்னாப்பிரிக்கா 275 ரன்களை எட்டியது.

முடிவில் கவனம்
இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. பாலோ ஆன் கொடுக்கலாம் என்றாலும், இன்னும் இரண்டு நாட்கள் போட்டி மீதம் இருந்ததால், இந்தியா கவனமாக முடிவு எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.

கோலி முடிவு என்ன?
நான்காம் நாள் காலை கேப்டன் கோலி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? பாலோ ஆன் கொடுப்பாரா? அல்லது இந்தியா சில ஓவர்கள் பேட்டிங் செய்த பின் தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய இலக்கு நிர்ணயித்து ஆட வைப்பாரா? என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் தான் பாலோ ஆன் கொடுத்தார்.

பந்துவீச்சாளர்கள் சோர்வு
முதலில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஒரு நாள் முழுவதும் பந்து வீசி சோர்ந்து இருப்பார்கள் என்பதால் கோலி இந்திய அணியை பேட்டிங் ஆட வைத்து பின் நான்காம் நாளின் கடைசி 20 - 30 ஓவர்கள் இருக்கும் போது தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய இலக்கு நிர்ணயித்து டிக்ளர் செய்வார் என கருதப்பட்டது.

ஏன் இந்த முடிவு?
கோலி இந்த முடிவை எடுக்க காரணம், மூன்றாம் நாள் முடிவில் இந்திய வீரர்கள் ஓய்வு எடுத்து உள்ளனர். மறுபுறம் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்க்ஸில் படுமோசமாக ஆடி மனதளவில் சோர்ந்து போய் உள்ளனர்.

ஐந்து பந்துவீச்சாளர்கள்
எனவே, அவர்களை உடனடியாக அழைத்து ஆட வைத்தால் அவர்களை வீழ்த்தலாம் என்று திட்டமிட்டுள்ளார். அதே சமயம் இந்தியா வசம் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு அழுத்தம்
அவர்களை மாற்றி மாற்றி பந்துவீச வைப்பதன் மூலம் அவர்கள் சோர்வு அடையாமல் பார்த்துக் கொள்ளலாம். தென்னாப்பிரிக்க அணிக்கு தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட வைத்து அழுத்தம் கொடுக்கலாம் என்பதாலேயே கோலி இந்த முடிவை எடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா பதற்றம்
அவர் எடுத்த முடிவு சரிதான் என்பது போல, தென்னாப்பிரிக்க அணி களமிறங்கிய உடன் இரண்டு விக்கெட்களை இழந்தது. இரண்டாவது பந்தில் மார்கிரம் ஆட்டமிழந்தார். அடுத்து ப்ரூன் ஆறாவது ஓவரில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்கா 21 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

டிரா ஆகுமா?
இந்தப் போட்டி டிரா ஆவது கடினமே. எட்டு விக்கெட்களை வைத்துக் கொண்டு தென்னாப்பிரிக்க அணியால் இரண்டு நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது. அதே சமயம், புனேவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications