கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான நிலையில் தள்ளப்பட்டுள்ளது. விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருந்த நேரத்தில், அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட், மிக மோசமான ஷாட் ஆடி தனது விக்கெட்டைத் தாரைவார்த்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தடுமாறியது. கே.எல். ராகுல் (22), சாய் சுதர்சன் (15), துருவ் ஜூரல் (0) என முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இந்திய அணி 102 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது களத்திற்கு வந்தார் ரிஷப் பண்ட். மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது, நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைப்பதே ஒரு கேப்டனின் கடமை. ஆனால், ரிஷப் பண்ட் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில், தேவையில்லாத அவசரத்தைக் காட்டினார்.
மார்கோ ஜான்சன் வீசிய 38-வது ஓவரில், பண்ட் கிரீஸை விட்டு இறங்கி வந்து பந்தை விளாச முயன்றார்.
ஆனால் பந்து பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் வெரைன் கையில் தஞ்சமடைந்தது. போதாக்குறைக்கு, தான் அவுட் என்று தெரிந்தும் தேவையில்லாமல் ஒரு 'ரிவ்யூ'வையும் வீணடித்துவிட்டு வெளியேறினார். 7 ரன்களில் அவர் ஆட்டமிழந்தது இந்திய அணியை அதல பாதாளத்தில் தள்ளியது.
ரிஷப் பண்ட் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இறங்கி வந்து அடிப்பதில் வல்லவர் தான். ஆனால், அது தென்னாப்பிரிக்க பவுலர்களிடம் எடுபடவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.
மற்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து இறங்கி வந்து ஆடும்போது, பண்ட் இதுவரை 73 பந்துகளில் 163 ரன்கள் குவித்துள்ளார். அதன் சராசரி 81.2 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 223.28. இது மிகச்சிறந்த ரெக்கார்ட்.
ஆனால், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களிடம் இறங்கி வந்து ஆடும்போது அவர் படுதோல்வி அடைந்துள்ளார். இதுவரை 9 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து 3 முறை விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். இதன் சராசரி வெறும் 2.66 மட்டுமே. இந்த பலவீனம் தெரிந்திருந்தும், மீண்டும் அதே தவறை செய்து தனது விக்கெட்டை மார்கோ ஜான்சனிடம் பறிகொடுத்துள்ளார் பண்ட்.
ரிஷப் பண்ட் மட்டுமின்றி, ரவீந்திர ஜடேஜாவும் 6 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 164 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே ஆறுதலாக 58 ரன்கள் எடுத்தார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இணைந்து விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தி 50 ரன்களுக்கும் அதிகமாக கூட்டணி அமைத்தனர்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து மோசமான ரெக்கார்டை இந்திய அணி சந்திக்க நேரிடும். இந்த இக்கட்டான சூழலில் ரிஷப் பண்ட் ஆடிய விதம் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.