செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டியின் முதல் நாளே இந்திய அணியை ஆல் - அவுட் செய்ய திட்டம் போட்டது. விராட் கோலி விக்கெட் வீழ்ந்த உடன் இந்திய அணி சரிந்து விடும் என எண்ணிய அந்த அணியின் என்னத்தை உடைத்தார் கே எல் ராகுல்.
ராகுலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி பெரும் சரிவில் இருந்து மீண்டு முதல் இன்னிங்க்ஸில் 200 ரன்களை கடந்தது. மழை வந்ததால் 59 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. அதனால், தென்னாப்பிரிக்க அணி பெரும் ஏமாற்றம் அடைந்தது. விரைவாக 5 விக்கெட்களை வீழ்த்தியும், கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டது தென்னாப்பிரிக்க அணி.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 17 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினர். அடுத்து வந்த சுப்மன் கில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஸ்ரேயாஸ் ஐயர் 31, விராட் கோலி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி 31 ஓவர்களில் எல்லாம் 107 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்களை இழந்தது. அடுத்து ஒரே ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக கே எல் ராகுல் மட்டுமே பேட்டிங் செய்து வந்தார். பின்வரிசை வீரர்கள் அஸ்வின், பும்ரா, ஷர்துல் தாக்குர் ஆகியோருடன் கூட்டணி அமைத்து ராகுல் ரன் குவித்தார். கோலி ஆட்டமிழந்த உடன் எப்படியும் இந்திய அணியை 200 ரன்களுக்குள் அவுட் ஆக்கலாம் என திட்டம் போட்ட தென்னாப்பிரிக்க அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார் ராகுல்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கே எல் ராகுல் 70 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 59 ஓவர்களுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து இருந்தது. தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் ரபாடா 5 விக்கெட், பர்கர் 2 விக்கெட், மார்கோ ஜான்சென் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 250 ரன்கள் வரை சேர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.