கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தத் தோல்விக்குப் பிறகு, "அணி மாற்றுக் காலத்தில் (Transition Period) இருப்பதால் இது போன்ற சரிவுகள் சகஜம்" என்று பயிற்சியாளர் கம்பீரின் "விசுவாசிகள்" சமூக வலைதளங்களில் கூறும் காரணங்களை, இந்திய அணியின் முன்னாள் வீரர் சத்தேஸ்வர் புஜாரா கடுமையாகச் சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில், 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, தென் ஆப்பிரிக்கக் கேப்டன் டெம்பா பவுமா வெளிப்படுத்தியது போன்ற நிதானத்தையோ, பேட்டிங் முறையையோ வெளிப்படுத்தத் தவறியது. வெறும் 35 ஓவர்களில் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, நம்ப முடியாத தோல்வியைச் சந்தித்தது. கேப்டன் சுப்மன் கில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவரால் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பேட்டிங் செய்ய முடியவில்லை.

இந்தத் தோல்வி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய புஜாரா, அணி மாற்றுக் காலத்தில் இருக்கிறது என்ற வாதத்தை அடியோடு நிராகரித்தார். "இந்தக் காரணத்தை நான் ஒப்புக்கொள்ள மாத்தேன். மாற்றுக் காலம் என்பதற்காக இந்திய அணி சொந்த மண்ணில் தோற்பதை ஜீரணிக்கவே முடியாது."
"இதே அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தோற்றால்கூட, அது ஒரு மாற்றுக் காலம் என்பதால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் உள்ள திறமையையும், ஆற்றலையும் பாருங்கள்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில் போன்ற வீரர்களின் முதல் தர கிரிக்கெட் சாதனைகளைப் பாருங்கள். இவ்வளவு சிறப்பான சாதனைகளைக் கொண்ட வீரர்கள் இருந்தும், நாம் இந்தியாவிலேயே தோற்கிறோம் என்றால், அணியில் ஏதோ ஒரு பெரிய தவறு இருக்கிறது" என்று புஜாரா தனது அதிருப்தியை ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
புஜாராவின் இந்தக் கருத்து, இந்திய அணியின் தேர்வு முறைகள், ஆடுகளத் தயாரிப்பு மற்றும் வீரர்களின் அணுகுமுறை குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. சொந்த மண்ணிலேயே ஒரு எளிய இலக்கைத் துரத்த முடியாமல் தோற்றது, வெறும் ஒரு தோல்வி மட்டுமல்ல, அது இந்திய அணியின் தற்போதைய நிலை குறித்த ஒரு அபாய எச்சரிக்கை மணி என்பதே பல முன்னாள் வீரர்களின் கருத்தாக உள்ளது.