பும்ரா விக்கெட்கள்
இந்தியா - தென்னாப்பிரிக்கா லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா துவக்கத்தில் அருமையாக பந்து வீசி துவக்க வீரர்கள் ஹஷிம் ஆம்லா மற்றும் க்வின்டன் டி காக் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்கா திணறல்
அவரது பந்துவீச்சை தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் அடித்து ஆட முடியவில்லை. அதே போல, மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரும் குறைவாகவே ரன்கள் கொடுத்தார். அவர் பின்வரிசை வீரர்கள் இருவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
சாஹல் அசத்தல்
வேகப் பந்துவீச்சு இப்படி என்றால், சுழற் பந்துவீச்சில் சாஹல் பிரித்து மேய்ந்தார். அவர் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் கலக்கலாக செயல்பட்டனர். தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பும்ரா அளித்த பேட்டி
அப்போது இன்னிங்க்ஸ் இடைவேளையில் பும்ராவிடம் சிறிதாக பேட்டி எடுத்தனர். அப்போது பேசிய பும்ரா, இந்திய அணியின் திட்டப்படி டெஸ்ட் போட்டியில் பந்து வீசும் நீளத்தின் அளவில், இந்த போட்டியில் பந்து வீசியதாக கூறினார். மேலும், பிட்ச்சின் மூலம் வேகம் கிடைத்ததால், தாங்கள் எதுவும் முயற்சி செய்யாமல், சரியான அளவில் பந்து வீசி விட்டு, பேட்ஸ்மேன் தவறு செய்யக் காத்திருந்ததாக கூறினார்.
நெருப்பைக் கக்கிய ரபாடா
இதன் பின் இந்தியா பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்கா அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் தாக்குதல் பாணியில் பந்து வீசினர். அதிலும், பும்ராவுக்கு இணையான வேகப் பந்துவீச்சாளரான ரபாடா தன் பந்துவீச்சில் நெருப்பைக் கக்கினார். விக்கெட் எடுத்தே தீர வேண்டும் என முயற்சி செய்தார்.
தாக்குதல் பாணி
துவக்கத்தில் தவான் விக்கெட் அவருக்கு கிடைத்தது. ஆனால், அதன் பின் கோலி, ராகுல், ரோஹித் ஆகியோர் மிகவும் பொறுமையாக டெஸ்ட் போட்டி போலவே ஆடினர். ஆனாலும், தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் தாக்குதல் பாணியையே கடைபிடித்தனர். கோலி, ராகுல் வீழ்ந்தாலும், விக்கெட்கள் இடையே நீண்ட இடைவெளி இருந்தது.
4 மெய்டன்
இந்திய பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்களின் 4 ஓவர்களை மெய்டனாக மாற்றி சமாளித்து, எளிதாக வெற்றிக் கோட்டை தொட்டனர். பும்ரா சொன்னது போல, டெஸ்ட் போட்டி போல தென்னாப்பிரிக்க அணியும் தங்கள் திட்டத்தை மாற்றி இருந்தால், வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு அமைந்திருக்கும்.
அணியின் திட்டம்
அதே சமயம், பும்ரா அடுத்த போட்டியிலும் இதே போல போட்டியின் இடையே இந்திய அணியின் திட்டங்களை கூறாமல் இருக்க வேண்டும்.