ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் அடித்தார். இதில் 11 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 52 ஆவது சதத்தை விராட் கோலி அடித்துள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலி வெறும் ஒருநாள் போட்டிகள் மட்டும் தான் விளையாடுகிறார் என்பதால் அவர் எப்படி தயாராகிறார் என்பது குறித்து தாம் அவரிடம் பேசி சிறிது நேரம் உரையாடியதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஸ்டெயின் கூறியுள்ளார்.

ராஞ்சியில் முதல் ஒருநாள் போட்டிக்கு முந்தைய நாள் இரவு சாப்பிடும் போது விராட் கோலியுடன் தான் உரையாடினேன். அப்போது நீங்கள் வெறும் ஒருநாள் கிரிக்கெட் மட்டும்தான் விளையாடுகிறீர்கள். எப்படி தயாராகி வருகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், நான் தற்போது லண்டனில் வாழ்கின்றேன்.
அங்கு லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பு வசதிகள் இருக்கின்றது. இதேபோன்று அங்கு நான் பயிற்சிக்கு தினமும் செல்கின்றேன். என்னுடன் இணைந்து பயிற்சி செய்வதற்கும் என்னை வழிநடத்துவதற்கும் நான் ஒரு தனி பயிற்சியாளர் வைத்திருக்கின்றேன். அங்கு அவருடன் இணைந்து ஒவ்வொரு தொடருக்கும் நான் தீவிரமாக தயாராகி வருகின்றேன் என்று கோலி தம்மிடம் கூறியதாக ஸ்டெயின் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய ஸ்டெயின், விராட் கோலியை நீங்கள் பார்க்கும் போது அவர் அனைத்து விதமான சூழலுக்கும் தயாராக இருப்பார் என்பதை தெரியும். உடல் அளவில் மட்டும் இல்லாமல் மனதளவிலும் அவர் மிகவும் பலமாக இருக்கின்றார். இவ்வளவு ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் அவர் 52 சதம் அடித்து இருக்கின்றார். அவருடைய விளையாட்டு குறித்து அவருக்கு நன்றாக தெரியும். எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் அவர் தெரிந்து வைத்திருக்கின்றார். அவர் லண்டனில் சும்மாக இருந்து கொண்டு பின் இந்திய அணியுடன் வந்து சேர்வது கிடையாது. தொடர்ந்து அவர் அங்கு பயிற்சி செய்து தயாராகிய பின் தான் இந்திய அணியில் வந்து சேருகின்றார். அதனால் தான் இப்படி ஒரு செயல்பாடுகளை நம்மால் பார்க்க முடிகிறது. இதுதான் உண்மையான தொழில் முறை கிரிக்கெட் வீரர்கள் செய்வார்கள் என்று ஸ்டெயின் கூறியுள்ளார்.