மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிகளில் இந்திய அணி நம்பர் மூன்றாவது வீரராக அக்சர் பட்டேலை களம் இறக்கியதற்கு முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். 214 ரன்கள் என்ற இலக்கை துரத்தியபோது, இந்திய அணி மூன்றாவது வீரராக அக்சர் பட்டேலை களம் இறக்கியது.
அவர் பவர்பிளேவில் 21 பந்துகளை எதிர் கொண்டு 21 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெயின், இந்திய அணி சோதித்துப் பார்த்து தோல்வியை தழுவி இருக்கின்றது. நம்பர் மூன்றாவது இடத்தில் உங்களுடைய சிறந்த பேட்ஸ்மேன் தான் களத்திற்கு வந்து விளையாட வேண்டும்.

என்னை பொறுத்தவரையில் இந்தியா செய்தது மிகப்பெரிய தவறு. அக்சர் பட்டேலுக்கு பேட்டிங் தெரியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏன் எனக்கு கூட தான் பேட்டிங் செய்ய வரும். இதனால் என்னை மூன்றாவது வீரராக களம் இறக்குவீர்களா? நரிகளுக்கு நடுவே அக்சர் பட்டேல் தூக்கி எறிந்ததற்கு சமம். அவருடைய பணி என்ன?
உத்தப்பா சரியாக சொன்னார். மூன்றாவது இடத்திற்கு வந்து களம் இறங்கினால் அவர் அடித்து விளையாடிருக்க வேண்டும். ஆனால் அவரும் பந்துகளை வீண் அடித்தார். அபிஷேக் முதலில் ஆட்டம் இழந்தால் வலது கை பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவை நீங்கள் களம் இறக்கி இருக்க வேண்டும்.
கில் ஆட்டம் இழந்தால் திலக் வர்மாவை களம் இறக்கி இருக்க வேண்டும். ஆனால் கில் ஆட்டம் இழந்த பிறகு மீண்டும் இடது கை பேட்ஸ்மேனை களத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். அப்போது களத்தில் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றார்கள். இது மிகப் பெரிய கேள்வியை எழுப்பி இருக்கின்றது.
ஆனால் இந்திய அணி அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் இதுபோல் கேள்விகளை எல்லாம் உங்களுடைய பயிற்சியாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து எதிர் கொள்கின்றார். ஆனால் இந்தியா செய்தது உண்மையிலேயே வினோதமான முடிவு. டி20 உலக கோப்பைக்கு முன்பு சில பரிசோதனை முயற்சியில் இந்தியா இறங்கி இருக்கலாம்.
ஏனென்றால் தென்னாப்பிரிக்காவும் அதைத்தான் செய்தது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பீர்கள். ஆட்டத்தின் பெரும்பான்மையான பகுதியில் உங்களுடைய சிறந்த பேட்டர்களை வைத்து விளையாடுங்கள். இயல்பாக எதிர்கொள்ளுங்கள் என்று ஸ்டெயின் கூறியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டிசம்பர் 14ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.