அகமதாபாத்: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்வி இந்திய அணியின் அரையிறுதி கனவுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தப் போட்டியில், மைதானத்தில் நடந்த ஒரு மோதல் சம்பவம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
வழக்கமாக மைதானத்தில் மிகவும் அமைதியாகக் காணப்படும் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரிடம் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இன்னிங்ஸின் நடுப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. டேவிட் மில்லர் பேட்டிங் முனைக்கு எதிர்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஜோடி வீரரான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன் ஓடினார்.
அந்த நேரத்தில் பந்துவீசிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர், தான் பந்துவீசுவதற்கு முன்பாகவே டேவிட் மில்லர் கிரீஸை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது. இதனை கவனித்த வாஷிங்டன் சுந்தர், இது குறித்து கள நடுவரிடம் முறையிட்டார். சுந்தர் தன்னிடம் ஏதோ குறை கண்டறிந்து நடுவரிடம் புகார் கூறுவதை உணர்ந்த டேவிட் மில்லர் சட்டென்று நிதானம் இழந்தார்.
சுந்தரின் செயலால் கோபமடைந்த மில்லர், அவரை நோக்கி வேகமாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட வாஷிங்டன் சுந்தரும் பதிலுக்குப் பேச, மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த கள நடுவர் கிறிஸ் கஃப்பனி உடனடியாகத் தலையிட்டு இருவரையும் விலக்கி வைத்தார். பின்னர் குடிநீர் இடைவேளையின் போது தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் வந்து வீரர்களைச் சமாதானப்படுத்தினார்.
ஆரம்பத்தில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியபோது, டேவிட் மில்லர் தான் அணியை மீட்டார். இந்த வாக்குவாதத்திற்குப் பிறகும் தனது கவனத்தைச் சிதறவிடாத அவர், இந்திய பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.
35 பந்துகளைச் சந்தித்த மில்லர் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்தார். இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோருடன் இணைந்து அவர் அமைத்தக் கூட்டணி அணியின் ஸ்கோரை 187 ரன்களுக்குக் கொண்டு சென்றது.
188 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது. இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் 111 ரன்களுக்கு இந்தியா சுருண்டது. இந்தத் தோல்வி இந்தியாவின் ரன் ரேட்டைப் பெருமளவு பாதித்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் எஞ்சியுள்ள போட்டிகளில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது.