அகமதாபாத்: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் அகமதாபாத்தில் இன்று பலபரீட்சை நடத்தியது. சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த ஆட்டம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் பலமே அந்த அணியின் முன்வரிசை வீரர்கள் தான். இந்த நிலையில் அதிரடி வீரர் குயின்டன் டிகாக் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பவுலிங்கில் போல்ட் ஆனார்.

இதேபோன்று கேப்டன் ஏய்டன் மார்க்கரம் நான்கு ரன்களில் ஆர்ஸ்தீப் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க ரியான் ரிக்கல்டன் 7 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 20 ரன்களுக்கு எல்லாம் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த சூழலில் களத்திற்கு ஜோடி சேர்ந்த டிவால்ட் பிரவீஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தென்னாப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஒரு கட்டத்தில் இருவரும் அதிரடி காட்ட இந்திய பவுலர்கள் தடுமாறினர். இந்திய வீரர்கள் வீசும் பந்தை எல்லாம் சிக்ஸர், பவுண்டரி என இந்த ஜோடி அடிக்க தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் தங்கம் விலை போல் உயர்ந்தது.
பிரவீஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் சிவம்துபே ஓவரில் ஆட்டம் இழந்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதேபோன்று டேவிட் மில்லர் 35 பந்துகளில் ஏழு பவுண்டரி, மூன்று சிக்சருடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்தார். இந்த தருணத்தில் மார்க்கோ யாசன், கார்பின் போஷ் ஆகியோர் சொற்ப ரன்ளில் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டும் தனியாளாக நின்று போராடினார்.
கடைசி ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி தென்னாப்பிரிக்க அணியை ஏழு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் என்ற ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், ஆர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டையும்,வருண் சக்கரவர்த்தி மற்றும் சிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்