பெங்களூர்: இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின், புஜாரா உள்ளிட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தேர்வு குழுவினர் புது முக வீரர்களை வைத்து அணியை தயார் செய்து வருகின்றனர். ரகானே, முகமது சமி உள்ளிட்ட வீரர்களுக்கு இடம் வழங்கப்படாத நிலையில் இளைஞர்களை நோக்கி பயிற்சியாளர் கம்பீர் சென்றுவிட்டார் என்பதையே இது காட்டுகிறது.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் நம்பர் மூன்றாவது இடத்திற்கு புஜாராவுக்கு பின் சரியான வீரர் கிடைக்கவே இல்லை.இந்த இடத்தில் கில் விளையாடி வந்த நிலையில் அவர் கேப்டனான பிறகு நான்காவது இடத்திற்கு சென்றுவிட்டார். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

எனினும் சாய் சுதர்சன் பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை. போக்கிரி திரைப்படத்தில் பாண்டுவை பார்த்து எப்படி வடிவேலு, வாய் மட்டும்தான் வேலை செய்கிறது, கை வேலை செய்யவில்லை என்று சொல்வாரோ, அதேபோல் சாய் சுதர்சன் ஒவ்வொரு இன்னிங்ஸ் ஆடுவதற்கு முன்பு பந்தை வைத்து குறளி வித்தை மட்டுமே காட்டுகிறார், தவிர பேட்டிங்கில் பெரிய அளவு எதையும் செய்யவில்லை.
இந்த நிலையில் அவருக்கு மேலும் வாய்ப்பு வழங்கும் விதமாக தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான தொடரில் சாய் சுதர்சனுக்கு நம்பர் மூன்றாவது வீரராக இடம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தொடரிலும் அவர் சொதப்பிவிட்டார். இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் 17 ரன்கள் மற்றும் 23 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல் இரண்டு இன்னிங்ஸிலுமே சதம் அடித்திருக்கிறார். அதுவும் அணி இக்கட்டான நிலையில் இருந்த போது முதல் இன்னிங்ஸில் 132 ரன்களும், அதே போல் மீண்டும் இக்கட்டான நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டம் இழக்காமல் நின்றுள்ளார்.
கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பண்ட் காயமடைந்ததால் துருவ் ஜூரலுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது ரிஷப் பண்ட் தன்னுடைய பேட்டிங் ஃபார்மையும் நிரூபித்து விட்டார். இதனால் அவர் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார். இதனால் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த துருவ் ஜூரல், சாய் சுதர்சன் இடத்தில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.