பெங்களூர்: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பரான துருவ் ஜுரெல் தனியாளாக போராடி சதம் விளாசி அசத்தியுள்ளார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி துருவ் ஜுரெல் 132 ரன்களை சேர்த்ததால், இந்திய அணியால் 255 ரன்களை எடுக்க முடிந்தது.
இந்திய டெஸ்ட் அணியின் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் செயல்பட்டு வருகிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது ரிஷப் பண்ட்-க்கு காயம் ஏற்பட்டதால், துருவ் ஜுரெல் 2 போட்டிகள் முழுமையாக விக்கெட் கீப்பிங்கை மேற்கொண்டார். இதன்பின் கடைசி போட்டியில் மட்டுமே துருவ் ஜுரெலுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஜுரெல் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வானார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரெல் 210 பந்துகளில் 3 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 125 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் துருவ் ஜுரெல் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, பேட்ஸ்மேனாக கூட விளையாட வைக்கலாம் என்ற விவாதத்தை உருவாக்கினார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்த ஃபார்மை துருவ் ஜுரெல் அப்படியே தொடர்ந்து வருகிறார். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. இதன் 2வது போட்டியில் இந்திய ஏ அணி இன்று விளையாடியது. அதில் டாப் ஆர்டர் வீரர்களான கேஎல் ராகுல் 19 ரன்களிலும், ஈஸ்வரன் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
பின்னர் சாய் சுதர்சன் 17 ரன்களிலும், படிக்கல் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ஏ அணி 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது டெய்லண்டர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த துருவ் ஜுரெல், விரைவாக ரன்களை குவிக்க தொடங்கினார்.
சிறப்பாக ஆடிய அவர் 145 பந்துகளில் சதம் விளாசினார். கடைசி வரை களத்தில் இருந்த அவர் 175 பந்துகளில் 4 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 132 ரன்களை விளாசி தள்ளினார். இதனால் இந்திய ஏ அணி 255 ரன்களை எடுத்தது. இந்திய ஏ அணி அடித்த ரன்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ரன்களை துருவ் ஜுரெல் விளாசி இருக்கிறார். இதனால் துருவ் ஜுரெலை விக்கெட் கீப்பராக மட்டும் அல்லாமல் பேட்ஸ்மேனாகவும் விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.