முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 502 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா பாலோ ஆன் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி 431 ரன்கள் குவித்தது.
இரண்டாம் இன்னிங்க்ஸ் அதிரடி
இரண்டாம் இன்னிங்க்ஸில் 71 ரன்கள் முன்னிலையுடன் ஆடிய இந்திய அணி நான்காம் நாளில் விரைவாக ரன் குவிக்க முடிவு செய்து ஆடியது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். புஜாரா முதலில் நிதானம் காட்டினாலும் பின்னர் வேகம் எடுத்தார்.
டிக்ளர் செய்த கோலி
ஜடேஜா 40, கோலி 31*, ரஹானே 27* ஆகிய மூவரும் அதிரடியாக ரன் குவித்தனர். டி20 போட்டி போல ஆடி அணியின் ஸ்கோரை 323 வரை கொண்டு சென்றனர். கோலி அப்போது டிக்ளர் செய்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அணியின் திட்டம் என்ன?
இந்திய அணியின் திட்டம் இதுதான். நான்காம் நாளின் கடைசி சில ஓவர்களில் 2 - 3 விக்கெட்கள் வீழ்த்துவது. கடைசி நாளான, ஐந்தாம் நாள் தென்னாப்பிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுத்து விக்கெட்களை குவித்து வெற்றி பெறுவது. தென்னாப்பிரிக்கா எப்படியும் 395 ரன்கள் என்ற இலக்கை எட்டாது என்பது இந்திய அணியின் எண்ணம்.
தென்னாப்பிரிக்கா சமாளிக்கும்
ஆனால், சில ரசிகர்கள் கோலி எடுத்த முடிவு சரி தான் எனவும், தவறு எனவும் கூறி வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ் போலவே இரண்டாம் இன்னிங்க்ஸிலும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கும் என சிலர் கூறுகின்றனர்.
வெற்றி அல்லது டிரா
ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கிறது என கூறினாலும், மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் இரு அணிகளுமே சிறப்பாக ரன் குவித்துள்ளன. அதனால், தென்னாப்பிரிக்க அணி எளிதாக டிரா செய்யும் அல்லது போராடி வெற்றி பெறும் என சிலர் கூறும் கருத்தும் சிந்திக்கும்படி உள்ளது.
முன்பே டிக்ளர் செய்திருக்கலாம்
சிலர் 395 ரன்கள் இலக்கு என்பதை விட இந்திய அணிக்கு அதிக ஓவர்கள் தான் தேவை. எனவே, இந்தியா அணி 350 ரன்கள் இலக்கு நிர்ணயித்து, சில ஓவர்கள் முன்பே டிக்ளர் செய்து, கூடுதல் ஓவர்கள் பந்து வீசி இருக்கலாம் என கூறி வருகின்றனர்.
சரியான முடிவு தான்
இந்திய ஆடுகளத்தில் ஐந்தாம் நாளில் நிச்சயம் தென்னாப்பிரிக்க அணியால் தாக்குப் பிடிக்க முடியாது என்று கூறும் சிலர் கேப்டன் கோலி எடுத்த முடிவு தான் சரி என வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
என்ன நடக்கும்?
தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்க்ஸில் இந்திய சுழற் பந்துவீச்சை எளிதாக சமாளித்து ஆடியது. இன்னும் சொல்லப் போனால், பாப் டு ப்ளேசிஸ் மற்றும் டி காக் சுழற் பந்துவீச்சாளர்களை அடித்து ஆடினர். எனவே, அவர்கள் இருவரும் தான் ஐந்தாம் நாளில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வீரர்களாக இருப்பார்கள்.
இந்தியா வெல்லுமா?
டு ப்ளேசிஸ், டி காக் இருவரையும் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய விடாமல் வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் அதே போல, தென்னாப்பிரிக்க அணியின் பின்வரிசை வீரர்களும் பந்து தடுத்து நீண்ட நேரம் பேட்டிங் செய்வார்கள் என்பதால் அவர்கள் விக்கெட்டையும் விரைவில் வீழ்த்த வேண்டும்.