கொல்கத்தா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் 38 விக்கெட்டுகள் விழுந்தது. ஆனால் அதில் 22 விக்கெட்டுகள் சுழற் பந்துவீச்சாளர்கள் எடுத்தார்கள்.
எனினும் இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பெரிய அளவு பந்து வீசவில்லை. குறிப்பாக அவர் முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவர் மட்டும்தான் வீசியிருந்தார். இதனால் வாஷிங்டன் சுந்தர் வெறும் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தும் வகையில் அணி நிர்வாகம் அவரை மாற்றி வருகிறது.

இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு தினேஷ் கார்த்திக் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் வாஷிங்டன் சுந்தரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அவர் உங்களுக்கு பேட்டிங் தெரிந்த பவுலரா? இல்லை பவுலிங் தெரிந்த பேட்டரா? தற்போது நீங்கள் மூன்றாவது வீரராக அவரை களம் இறக்குகிறீர்கள்.
இதன் மூலம் பேட்டிங்கில் நிறைய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள். ஒரு கட்டத்தில் அவர் வலைப்பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்ய கவனத்தை தருவார். இதன் மூலம் பந்துவீச்சில் அவருடைய பயிற்சி நேரம் குறையும். இதனால் பௌலிங் தரம் அவருக்கு குறைந்து விடும். வாஷிங்டன் சுந்தர் போன்ற உடல் தகுதியை உடைய ஒரு வீரரால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட முடியாது.
எனவே நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். ஒருவேளை வாஷிங்டன் சுந்தரடமிருந்து நீங்கள் பெரிய ரன்கள் எதிர்பார்க்கிறீர்கள். மூன்றாவது இடத்தில், நீ அதிக போட்டிகளில் களமிறங்குவாய் என்று சொன்னால் அது நிச்சயம் அவருடைய பவுலிங்கை பாதிக்கும். இது உண்மையிலே சிக்கலான விஷயம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் விளையாட வில்லை என்றால், அவருக்கு பதில் நிதிஷ்குமார் ரெட்டி களம் இறங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது,