சென்சுரியன்: தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க கூடாது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சென்சுரியனில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்ற இந்திய அணி வீரர்கள் தயாராக உள்ளனர்.

தென்னாப்பிரிக்கா மைதானங்களில் தொடக்க வீரர்கள் விக்கெட்டை காப்பாற்றுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. கடந்த முறை கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் 2018ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது ஷிகர் தவான், முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல் மூவருமே சோபிக்கவில்லை.
அதனால் இம்முறை ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி மீது இந்திய ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் மட்டும் 3 இன்னிங்ஸ்களில் மட்டும் ஒரு சதம் உட்பட 266 ரன்களை விளாசினார். தேவைக்கேற்ப நிதானமாகவும், அதிரடியாகவும் ரன்களை குவித்தார்.
இந்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் இருந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்க கூடாது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கவுதம் கம்பீர் பேசுகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஃபிரண்ட் ஃபூட் மற்றும் பேக் ஃபூட்டில் விளையாட கூடிய திறமையான வீரர். ஆனால் தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அதிக சவால் நிறைந்தது.
நிச்சயம் அவர் அனுபவம் பெற்ற பின், இன்னும் சிறப்பாக செயல்படுவார். அதனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமோ அல்லது இரட்டை சதம் விளாசுவார் என்றோ எதிர்பார்க்க கூடாது. அவரால் சதம் விளாச முடியாது என்று சொல்லவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் 25 முதல் 30 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தாலே நிச்சயம் சிறந்த வீரராக உருவாக முடியும்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமல்ல, சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் இதே நிலை தான். 10 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் டெஸ்டில் ஆடினால் பெரியளவில் சோபிக்கவில்லை என்றாலும் விமர்சனங்கள் வராது. ஆனால் இந்திய மண்ணில் சொதப்பினால் விமர்சிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது முதல் வெளிநாடு சுற்றுப்பயணத்தில் சொதப்பினாலும் விமர்சனங்கள் அதிகமாகி வருகிறது என்று தெரிவித்துள்ளார்