ஜொகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, டி20 தொடரை சமன் செய்து அசத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதேபோல் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி 202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஹென்ரிக்ஸ் - ப்ரீட்ஸ்கே கூட்டணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். தொடர்ந்து முகேஷ் குமார் வீசிய 2வது ஓவரில் ப்ரீட்ஸ்கே 4 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஹென்ரிக்ஸ் 8 ரன்கள் எடுத்திருந்த போது சிராஜின் அபாரமான ஃபீல்டிங்கால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
தொடர்ந்து வந்த அதிரடி வீரர் கிளாஸன் அர்ஷ்தீப் சிங் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா வீசிய முதல் பந்திலேயே மார்க்ரம் 25 ரன்களில் வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஆடுகளத்தில் சுழல் இருப்பதை அறிந்து குல்தீப் யாதவ் - ஜடேஜா இருவரும் அட்டாக் மேல் அட்டாக் செய்தனர்.
இதன்பின் வந்த வீரர்களில் ஃபெரேரா மட்டும் 12 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய பெஹ்லுக்வாயோ ரன் ஏதும் எடுக்காமலும், மகாராஜ் ஒரு ரன்னிலும், பர்கர் 1 ரன்னிலும், வில்லியம்ஸ் டக் அவுட்டாகியும் வெளியேற, கடைசி வரை களத்தில் இருந்த டேவிட் மில்லர் 35 பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது.