ஜொகன்னஸ்பர்க்: இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காய்ச்சலில் இருந்து இதுநாள் வரை மீண்டு வரவில்லை என்று தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட மொத்தமாக 223 ரன்களை விளாசினார். இதனால் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக சுப்மன் கில் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், தென்னாப்பிரிக்கா வந்த நாள் முதலே காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது.
இதன் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பை பெறவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஒருநாள் தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுநாள் வரை காய்ச்சலில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் மீளவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரராக ரஜத் படிதர் உடன் இணைந்து தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் களமிறங்க அதிக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
முதல்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள சாய் சுதர்சன், கடந்த ஐபிஎல் தொடரில் இருந்தே தொடர்ச்சியாக சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் இரு தரப்பினரையும் வெளுத்து வாங்கும் திறமை கொண்ட சாய் சுதர்சன், இந்திய அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மை காலமாக இந்திய அணியின் அஸ்வின், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தனர். முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு பின் முதல்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு விளையாடவுள்ளது கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.