ஒவ்வொரு ரன்னும் தங்கம் போன்றது.. இந்திய பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டால் சோலி முடிஞ்சிரும்.. டூ பிளசிஸ்!
சென்சுரியன்: சென்சுரியன் ஆடுகளத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு ஈடானது என்றும், இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுமையாக பேட்டிங் செய்தால் மட்டுமே ரன்கள் சேர்க்க முடியும் என்றும் டூ பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. 1992ஆம் ஆண்டு முதல் 8 முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை ஒரு முறை வென்றதில்லை. அதில் 7 முறை தென்னாப்பிரிக்கா அணியே வென்றுள்ளது. இதற்கு இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டமே காரணமாக அமையும்.

தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களை பொறுத்தவரை பிட்சில் நல்ல வேகமும், பவுன்ஸ்-ம் இருக்கும். இந்திய ஆடுகளங்களை போல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதை, போல் தென்னாப்பிரிக்கா ஆடுகளங்களில் இருக்காது. குறிப்பாக வழக்கத்தை விட அதிகளவில் பவுன்ஸ் இருக்கும். பெரும்பாலும் நல்ல டெக்னிக்குடன் பேட்ஸ்மேன்கள் இல்லையென்றால், 2 செஷன்களில் கடப்பதே பெரிய விஷயமாக அமையும்.
இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் எப்படி தென்னாப்பிரிக்காவின் ஆக்ரோஷமாக பவுலர்களை சமாளிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா முன்னாள் கேப்டன் டூ பிளசிஸ் பேசுகையில், தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் நிச்சயம் பவுன்ஸ் இருக்கும். அதாவது இந்திய ஆடுகளங்களில் பந்துகள் ஆகும் பவுன்சை விடவும் கைகளை மேல் உயர்த்தினால் எவ்வளவு ஆகுமோ, அந்த அளவிற்கு பந்துகள் பவுன்ஸாகும்.
அந்த பவுன்சர்களை எதிர்கொள்ள எதிர்கொள்ள நிச்சயம் அனுபவம் இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டுமென்றால் இந்திய அணி வீரர்கள் பொறுமை காக்க வேண்டும். முதல் நாள் பிட்சில் ஆடுகளத்தில் புற்கள் இருக்கும். அதனால் நிச்சயம் சீம் பகுதியை பிடித்து பந்துவீசும் போது பந்து எந்த பக்கம் திரும்பும் என்பதை கணிக்க முடியாது. அதன்பின் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். அதன்பின் கடைசி 2 நாட்களில் குறைந்த அளவிலான பவுன்ஸ் மட்டுமே இருக்கும்.
அதனால் சென்சுரியன் ஆடுகளத்தை பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாட வேண்டும். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடும் அணி, போட்டியில் தோல்வியடைவது மிகவும் கடினம். ஆனால் பேட்டிங்கில் சொதப்பினால், வெற்றிபெறுவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ரன்னும் தங்கத்திற்கு சமமானது. இந்திய பேட்ஸ்மேன்கள் போதுமான ரன்களை சேர்த்தாலே, அனுபவம் வாய்ந்த பவுலர்கள் வேலையை செய்து முடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Story first published: Monday, December 25, 2023, 14:33 [IST]
Other articles published on Dec 25, 2023


Click it and Unblock the Notifications