பார்ல்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியின் போது, "ராம் சியா ராம்" பாடல் குறித்த கேஎல் ராகுல் - கேசவ் மகாராஜ் உரையாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 45.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. கடந்த முறை கேஎல் ராகுல் தலைமையில் ஒருநாள் தொடரில் இந்திய அணி பங்கேற்ற போது 3-0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இளம் வீரர்களை கொண்டு கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
இந்த போட்டியின் போது இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்பின்னர் கேசவ் மகாராஜ் இருவருக்கும் இடையில் சுவாரஸ்யமான உரையாடல் நடைபெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர ஸ்பின்னரான கேசவ் மகாராஜ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரராவார்.
பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவில் செட்டிலாகி இருந்தாலும், இன்று வரை இந்து மதத்தை பின்பற்றி வருபவர். அதிலும் தனது பேட்டில் "ஓம்" ஸ்டிக்கர் ஒட்டி வெளிப்படையாக இந்து என்று அறிவித்து கொண்டவர். நேற்றைய ஆட்டத்தின் போது கேசவ் மகாராஜ் களமிறங்கிய போது, மைதானத்தில் இருந்த ஸ்பீக்கரில் இருந்து "ராம் சியா ராம்" என்று பாடல் ஒலிக்கப்பட்டது.
இதனை கேட்டு ஆச்சரியமடைந்த இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் உடனடியாக கேசவ் மகாராஜை பார்த்து, நீங்கள் எப்போது பேட்டிங் செய்ய வந்தாலும் அவர்கள் "ராம் சியா ராம்" பாடல் தான் ஒலிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தென்னாப்பிரிக்கா வீரர் மகாராஜ், ஆமாம் என்று சிரித்து கொண்டே பதில் அளித்தார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.