மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். அபிஷேக் ஷர்மா இதுவரை 10 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 170 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் நூறு ரன்கள் அடங்கும். இதனை அடுத்து மற்ற போட்டிகளில் அவர் மொத்தமாகவே 70 ரன்கள் தான் அடித்திருக்கிறார். குறிப்பாக கடந்த ஆறு இன்னிங்ஸில் அவர் ஒரு முறை கூட 20 ரன்களை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கடைசி மூன்று இன்னிங்சில் அபிசேக் 4,7,4 ஆகிய ரன்களை தான் அவர் அடித்திருக்கிறார். இதனால் அபிஷேக் ஷர்மாவை நீக்கிவிட்டு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜை பிளேயிங் லெவனுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சி எஸ் கே வின் கேப்டன் ஆகவும் ஐபிஎல் தொடரில் ருதுராஜ் பட்டையை கிளப்பி இருக்கிறார். இந்திய அணியின் அடுத்த ஸ்டார் வீரர்களில் ஒருவராக ருதுராஜ் வர வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ருதுராஜை தொடர்ந்து இந்திய ஏ அணியில் மட்டும் தேர்வு செய்யும் தேர்வு குழுவினர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புறக்கணித்து வருகிறார்கள்.
ஐபிஎல் தொடரில் 66 போட்டிகளில் விளையாடி 2,380 ரன்கள் ருதுராஜ் குவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்திய அணிக்காக 23 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் அவருடைய சராசரி 40 ஆக இருக்கின்றது. இதில் ஒரு சதம், நான்கு அரை சதம் என ருதுராஜ் அடித்திருக்கிறார்.
இதனால் அபிஷேக் ஷர்மா பின்னால் செல்வதை விட்டுவிட்டு ருதுராஜ்க்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். ருதுராஜ் குறித்து கேள்விக்கு பதில் அளித்த சூரியகுமார் யாதவ் அனைவருக்கும் வரிசைப்படி வாய்ப்பு வரும் என்று கூறியிருந்தார். ஆனால் அபிஷேக் ஷர்மாவை விட ருதுராஜ் நீண்ட காலமாக விளையாடி வந்து நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.