சண்டிகர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் தங்கள் கோபத்தை கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மீது திருப்பியுள்ளனர்.
நியூ சண்டிகரில் நடந்த 2வது டி20 போட்டியில் 214 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கேப்டனும் துணை கேப்டனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். "இனிமேலும் தாங்க முடியாது, இவர்களை அணியை விட்டு நீக்குங்கள்" என்று தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

துணை கேப்டன் சுப்மன் கில், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே லுங்கி இங்கிடி பந்துவீச்சில் முதல் பந்திலேயே எட்ஜ் ஆகி 'கோல்டன் டக்' முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, 4-வது ஓவரில் மார்கோ யான்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெறும் 5 ரன்களில் வெளியேறினார். இந்திய அணியின் மிக முக்கிய வீரர்கள் இருவரும் இப்படிச் சரிந்தது தான் தோல்விக்கு முக்கியக் காரணம்.
ரசிகர்களின் கோபத்திற்கு முக்கிய காரணம் சுப்மன் கில்லின் சமீபத்திய டி20 ஃபார்ம் தான். சுப்மன் கில் 2025ஆம் ஆண்டில் 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், வெறும் 263 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி வெறும் 17 தான். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
"ஒரு போட்டியில் சொதப்பினால் சஞ்சு சாம்சனைத் தூக்கும் கம்பீர், தொடர்ந்து சொதப்பும் கில்லை மட்டும் ஏன் தாங்கிப் பிடிக்கிறார்?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது அப்பட்டமான பாரபட்சம் என்றும் கொதிக்கின்றனர். அதேபோல் கேப்டன் சூர்யகுமார் யாதவும் 2025-ல் டி20 போட்டிகளில் சோபிக்கவில்லை. 17 இன்னிங்ஸ்களில் சராசரியாக 14.35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
"போதும்டா சாமி.. எவ்வளவோ திறமையான வீரர்கள் இருக்கும்போது, ஃபார்மில் இல்லாத இவர்களைத் தொடர்ந்து சுமப்பது ஏன்? கேப்டன், துணை கேப்டன் என்பதால் அணியில் இருக்க வேண்டுமா?" என்று ட்விட்டரில் (X தளம்) ரசிகர்கள் கம்பீரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளார். "கேப்டன் ரன் அடிக்கவில்லை என்றால் வண்டி ஓடாது. டாஸ் ஜெயிப்பது முக்கியமல்ல, சூர்யகுமார் யாதவ் ரன் அடிக்க வேண்டியது அவசியம். அதேபோல் சுப்மன் கில் மீதும் அழுத்தம் உள்ளது. ஓப்பனிங் இடத்திற்குப் பல மாற்று வீரர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை அவர் உணர வேண்டும்," என்று எச்சரித்துள்ளார்.
உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், கேப்டனும் துணை கேப்டனும் ஃபார்ம் அவுட்டில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.